tamilnadu

img

சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியைக் குறைத்தது ஒன்றிய அரசு!

புதுதில்லி, மே 25- 2022 மே 25 முதல் 2024 மார்ச் 31 வரை சமை யல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதன்மூலம் விலைவாசி குறையும் என்று எதிர்பார்ப்பதாக அது கூறியுள்ளது. இந்தியாவில் கோதுமை உள்ளிட்ட உணவு  தானியங்கள், தக்காளி, உருளைக் கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள், ஆப்பிள், பப்பாளி உள்ளிட்ட பழங்கள், சமையல் எண்ணெய் வகை கள், அயோடைஸ் உப்பு, இறைச்சி, ஆடைகள், காலணி, போக்குவரத்து, தகவல் தொடர்பு செல வினங்கள் என அனைத்தின் சில்லரை விலை களும் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத உச்சத்  திற்குச் சென்றுள்ளன. 

நுகர்வோர் பணவீக்க விகிதம் (Consumer Price Inflation - CPI) எனப்படும் சில்லரைப் பண வீக்கத்திற்கு ரிசர்வ் வங்கி 6 சதவிகிதம் என வரம்பு நிர்ணயித்திருந்த நிலையில், அது கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவிகிதமாக உயர்ந்தது. அதேபோல நாட்டின் மொத்த விலைப் (Wholesale Price Index - WPI) பணவீக்கமும், இதுவரை இல்லாத அளவிற்கு 2022 ஏப்ரலில் 15.08 சதவிகிதமாக அதிகரித்தது. கச்சா எண்ணெய், அடிப்படை உலோகம், கச்சா பெட்ரோலியம்& இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், உணவு சாரா பொருட் கள், ரசாயனம் உள்ளிட்டவற்றின் விலை உயர்வே பணவீக்கத்திற்கு முக்கியக் காரணம்  என்பதால் இந்தப் பொருட்களின் விலைவாசி யைக் குறைக்க வேண்டும்; கோதுமை உள்ளிட்ட உணவுதானிய ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இல்லாவிட்டால் பணவீக்கம் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த ஒன்றிய அரசு, சில நாட்களுக்கு முன்பு, பெட்ரோல் விலையில் 9.50 ரூபாயும், டீசல் விலையில் 7 ரூபாயும் கலால் வரியைக் குறைந்தது. அதேபோல, எஃகு மற்றும் பிளாஸ்  டிக் தொழிலில் பயன்படுத்தப்படும் சில மூலப்  பொருட்களின் இறக்குமதி வரியும் குறைக்கப் படும் என்று அறிவித்தது. இந்நிலையில்தான், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியையும் மோடி அரசு ரத்து செய்துள்ளது.  “2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் ஆண்டுதோறும் 20 லட்சம் டன் கச்சா சோயா பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு சுங்க வரி விதிக்கப்படாது. இறக்குமதி வரியில் அளிக்கப்  பட்ட இந்த விலக்கு உள்நாட்டு விலையை குறைக்கும் மற்றும் பணவீக்கத்தை கட்டுப் படுத்த உதவும். அரசாங்கம் எடுத்த முடிவின்படி, மார்ச் 31, 2024 வரை மொத்தம் 8 மில்லியன் டன்  கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை வரி யின்றி இறக்குமதி செய்யலாம். இது உள் நாட்டில் விலையை குறைக்க உதவும்” என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்றொரு உத்தரவில் சர்க்கரை ஏற்று மதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 2021-2022 (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி  முதல் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த உத்த ரவு 2022 ஜூன் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31, 2022 வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.