இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான நூற்றாண்டு நாயகர் - வாழும் வரலாறு என்.சங்கரய்யா அவர்களது வாழ்த்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின் துவக்க விழாவில் காணொலியாக விரிந்தது. பிரதிநிதிகள், பார்வையாளர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த அரங்கத்தில், சங்கரய்யாவை காணொலி வாயிலாக பார்த்ததும் பெரும் உற்சாகமும் உத்வேகமும் ஆட்கொண்டது. மெலிந்த தேகம், ஆனால் அதே சிம்மக்குரல். அவரது கர்ஜனை, அவரது வேண்டுகோள், அவரது எழுச்சி முழக்கம்... ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த தோழர்களின் உள்ளங்களையும் எழுச்சியுறச் செய்தது. ஒவ்வொருவரின் நெஞ்சமும் கண்களும், இதோ எங்கள் மகத்தான தலைவர் சங்கரய்யா எங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்று கசிந்துருகின. தனது காணொலி உரையின் நிறைவில் “மக்கள் ஜனநாயகப் புரட்சி ஓங்குக” என்று அவர் எழுப்பிய முழக்கம் அரங்கை அதிரச் செய்தது. ஒட்டுமொத்த கட்சியையும் இன்னும் வலுவாக நிமிரச் செய்தது. இதோ அந்த எழுச்சி உரை: