அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் குறித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
நவம்பர் 29, 2020 இல் நடத்தப்பட்ட அஞ்சல் துறை குரூப் B தேர்வுகளின் முடிவுகள் இரண்டரை ஆண்டுகளாக வெளியிடப்படாததையும், அதற்கு தடையாக சொல்லப்பட்ட நீதி மன்ற வழக்கும் முடிவுக்கு வந்து விட்டதையும், தாமதம் காரணமாக 100 அஞ்சல் மாவட்ட சேவைகள், ஐந்தாண்டு காலி இடங்கள் நிரப்பப்படாததால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் நான் 30.04.2022 அன்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் அவர்களுக்கு எழுதி இருந்தேன்.
அதற்கு அமைச்சர் இடமிருந்து பதில் வந்துள்ளது. 01.06.2022 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதென்றும், அது www.indiapost.gov.in தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தீர்வு காணப்பட்ட தகவல் ஒரு மாதம் தாமதமாக வந்திருந்தாலும், இரண்டரை ஆண்டு பிரச்சினை முடிவுக்கு வந்து ஐந்தாண்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.