tamilnadu

எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி

புதுதில்லி, ஜூலை 17- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தில்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே ஞாயிறன்று (ஜூலை 17) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்தார்.  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.  இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து வேட்பு மனு தாக்கல் ஜூலை 5-ல் தொடங்கியது. ஜூலை 19 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  ஏற்கெனவே, பாஜக கூட்டணி சார்பில் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கு பின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் மார்கரெட் ஆல்வா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், ராஜீவ் காந்தி, நரசிம்மா ராவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து மார்கரெட் ஆல்வா களமிறங்குகிறார்.