கோவி.பால.முருகு
ஏடுபுகழ் கொண்டதுநம் நாடே-அது
எண்ணற்ற மொழிவழங்கும் வீடே-தினம்
பாடுபுகழ் பண்பாடு கலைகள் -இவை
பயிலுகின்ற பண்முகத்தின் விலைகள்!
போர்முகத்தில் விடுதலையின் காற்று-தியாகப்
பொலிவுடனே பெற்றதையேப் போற்று-மத
வேர்முகத்தில் ஒற்றுமைக்கு இடையூறு -அதை
வேரறுக்க வேண்டியதை நீகூறு!
ஏழைகளை ஏமாற்றும் ஆட்சி-கார்ப்பரேட்
ஏற்றம்பெற அள்ளித்தரும் காட்சி-மத
பீழைகளை அரங்கேற்றும் கட்சி-ஒற்றுமை
பின்னுக்குத் தள்ளிவிடும் சூழ்ச்சி!
கடவுள்மதம் கூறாது வேற்றுமை ?-அதில்
கலகம்செயும் வேலைதான் கயமை!-மதக்
கடவுளிலும் வேற்றுமையைக் காட்டும்- உண்மைக்
கடவுளையே அறியாமல் முட்டும்!
கருணையிலா ஆட்சியதை ஒழித்திடு! -மக்கள்
கவலையைக் காணுமாட்சி எழுப்பிடு! -நாட்டை
அருள்நயந்த சன்மார்க்கர் ஆளட்டும்!-உயிர்
அத்துணையும் பேதமற்று வாழட்டும்!