tamilnadu

பேதமற்று வாழ்க!


கோவி.பால.முருகு

 ஏடுபுகழ் கொண்டதுநம் நாடே-அது
     எண்ணற்ற மொழிவழங்கும் வீடே-தினம்
பாடுபுகழ் பண்பாடு கலைகள் -இவை
     பயிலுகின்ற  பண்முகத்தின் விலைகள்! 

போர்முகத்தில்  விடுதலையின் காற்று-தியாகப்
  பொலிவுடனே பெற்றதையேப் போற்று-மத
வேர்முகத்தில்  ஒற்றுமைக்கு இடையூறு -அதை
     வேரறுக்க வேண்டியதை  நீகூறு!  

ஏழைகளை  ஏமாற்றும்  ஆட்சி-கார்ப்பரேட்
    ஏற்றம்பெற  அள்ளித்தரும் காட்சி-மத
பீழைகளை அரங்கேற்றும் கட்சி-ஒற்றுமை
     பின்னுக்குத் தள்ளிவிடும் சூழ்ச்சி!

கடவுள்மதம்   கூறாது  வேற்றுமை ?-அதில்
    கலகம்செயும்  வேலைதான்   கயமை!-மதக்
கடவுளிலும்  வேற்றுமையைக்  காட்டும்- உண்மைக்
    கடவுளையே அறியாமல் முட்டும்!

கருணையிலா  ஆட்சியதை  ஒழித்திடு! -மக்கள்
    கவலையைக்  காணுமாட்சி எழுப்பிடு! -நாட்டை 
அருள்நயந்த சன்மார்க்கர் ஆளட்டும்!-உயிர்
      அத்துணையும்  பேதமற்று வாழட்டும்!