tamilnadu

img

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள்

சிதம்பரம்  தொல். திருமாவளவன்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த 2019 தேர்தலில் வெற்றிபெற்ற சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் து. ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விழுப்புரம் தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனாகிய நான் 6-ஆவது முறையாக போட்டியிடுகிறேன். இருவருமே பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்று அறிவித்தார்.

அமைதிப் புரட்சி!

தொடர்ந்து பேசிய அவர், “10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த பாஜக-வினர் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசினார்கள். ஆனால், கண் கூடாக எந்த வளர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. உண்மையில் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. கார்ப்பரேட்டுகள், குறிப்பாக அம்பானி, அதானி போன்றவர்கள் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

மக்கள் வெல்வார்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சிறு, குறு தொழில் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன‌. இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்களவைத் தேர்தல், காங்கிரஸ் - பாஜக-விற்கோ, இந்தியா கூட்டணிக்கும் பாஜக-விற்கும் இடையிலோ நடக்கும் யுத்தம் அல்ல. ஒருபுறம் திரண்டுள்ள இந்திய மக்களுக்கும், மற்றொரு புறம் திரண்டுள்ள சங்-பரிவார் கும்பல்களுக்கும் இடையிலேயான யுத்தம். இந்த யுத்தத்தில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். அமைதிப் புரட்சியின் மூலம் பெரும் மாற்றம் ஏற்படும்” என்றார்.  

பிற்படுத்தப்பட்ட மக்களை  கைவிட்ட பாமக

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்த திருமாவளவன், “நாட்டைப் பாசிச சக்திகளிடம் இருந்து மீட்பதற்காக ராகுல் மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றும் பாமகவின் கூட்டணி முடிவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை பாமக கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் அரனாக உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்தார்.