tamilnadu

img

வெண்கொடி வீரர்களின் லட்சியப் பயணம் வெல்லட்டும்! - ஜி.ராமகிருஷ்ணன்

“இந்தியாவிற்கு சேவை செய்வது என்பது இந்த நாட்டில் துன்ப துயரத்தில் ஆழ்ந்திருக்கும் கோடானுகோடி மக்களுக்கு சேவை செய்வது என்பதாகும். இதன் பொருள், ஏழ்மையின் துயரத்தையும் அறியாமையை யும், கல்லாமையையும், நோய் நொடிகளையும் சமவாய்ப்பு இல்லாமையையும் போக்குவது - முடி வுக்கு கொண்டுவருவது என்பதே ஆகும். நமது தலை முறையின் காலத்தில் ஒவ்வொருவரின் கண்ணி லிருந்தும் வழியும் கண்ணீரை துடைப்பதே எந்த வொரு மாமனிதரின் விருப்பமாக இருக்க முடியும். இந்த இலக்கு நமது சக்தியை தாண்டியதாக இருக்க லாம்; ஆனால் கண்ணீரும் துயரங்களும் நீடிக்கும் வரை நமது பணிகளுக்கு ஓய்வே இல்லை”. - 1947 ஆகஸ்ட் 14-15 நள்ளிரவில் இந்திய நாடு  சுதந்திரம் பெற்ற அந்தத் தருணத்தில் தேசத்திற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு. நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. ஆனாலும் நேரு அன்றைக்கு குறிப்பிட்ட  அந்தப் பணி இன்னும் முடியவில்லை. கண்ணீரும்  துயரங்களும் நீடிக்கின்றன. அதிலும் குறிப்பாக கல்வியும் வேலைவாய்ப்பும் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கும் சூழல் நீடிக்கிறது. எல்லோ ருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற  கனவு இந்தியாவின் பெரும் கனவாக தொடர்கிறது. 2022 ஏப்ரல் துவக்க நிலவரத்தின்படி நாட்டின் வேலை யின்மை விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது. இதில் நகர்ப்புறத்தில் 9.2சதவீதமும் கிராமப்புறத்தில் 6.9 சதவீதமும் என்ற அடிப்படையில் வேலையின்மை தீவிரமான நிலைமையிலேயே உள்ளது.

8 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள மோடி அரசு தனது முதல்  ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று கூறி கடைசி யில் தேசத்தின் இளைஞர்களை ஏமாற்றியது. அந்த ஏமாற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை வேலைவாய்ப்ப கங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 80லட்சம் என தரவுகள் தெரி விக்கின்றன. தமிழகத்தின் மக்கள் தொகையில் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் இருப்பவர்களை கழித்துவிட்டால் எஞ்சியுள்ள மக்கள் தொகையில் 80லட்சம் பேர் என்பது ஒரு கணிசமான எண்ணிக்கை ஆகும். நாடு தழுவிய அளவில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. வேலையின்மை தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களும் படிப்படி யாக நிரந்தரப்பணிகளிலிருந்து வெளியேற்றப்படு கிறார்கள். அனைத்து துறைகளிலும் காண்ட்ராக்ட் மயம் வேகமெடுக்கிறது. பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆய்வு பட்டம் பெற்றவர்கள் உட்பட மிகவும் திறமைவாய்ந்த இளைஞர்களும் கூட ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்படுகிற அவலம் ஏற்பட்டுள்ளது.  வேலையின்மையின் தீவிரத்தால் இளைஞர்களி டையே போட்டியும் அதன் விளைவாக மோதல்களும் புதிய புதிய எல்லைகளை தொடும் சூழல் எழுந்துள் ளது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான  குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளி யிட்டது. மார்ச் 30 முதல் 20 நாட்களிலேயே வெறும் 7,382 பணியிடங்களுக்கு 20.53லட்சம் பேர்  விண்ணப் பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே வேலையின்மையின் கடுமையான தீவிரத் தன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் தற்போ துள்ள நிலைமையைப் போல் இதற்கு முன்  ஏற்பட்டது இல்லை. வேலையின்மை என்பது மிகப்பெரும் அச்சுறுத்தலையும் ஆபத்தையும் ஏற்படுத்துகிற ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.

வேலை யின்மை அதிகரிக்க அதிகரிக்க இளைஞர்கள் நிரம்பிய இந்தியாவின் ஆற்றல் மிகப்பெரும் அளவில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் உற்பத்தித் திறன் அதிகரிக்க வழியில்லாமல் முடக்கப்படுகிறது.  இந்தப் பின்னணியில்தான் அனைவருக்கும் கல்வியும், வேலையும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் இடைவிடாத போராட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பு பல மாநிலங்களில் முற்போக்கு வாலிபர் இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி(எஸ்ஒய்எப்) செயல்பட்டு வந்தது. 1978ல் குமரி மாவட்டம் களியக்கா விளையிலிருந்தும் நீலகிரியிலிருந்தும் சென்னை நோக்கி வேலைவாய்ப்புக் கோரிக்கைகளை முன்வைத்தும் வேலையில்லா கால நிவாரணம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் மாபெரும் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டோம். அச்சமயத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாநிலத் தலைவராக என். நன்மாறன், செயலாளராக கே.சி.கருணாகரன் ஆகி யோர் செயல்பட்டனர். திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட இவர்களோடு துணைத் தலைவராக நானும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினேன்.

அந்த சைக்கிள் பயணம் தமிழக இளைஞர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. சென்னையில் அப்பிரச்சாரப் பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரான ஏ.பாலசுப்பிரமணியம் பங்கேற்று உரையாற்றினார். வேலை கொடு; அல்லது வேலையில்லா கால  நிவாரணம் கொடு என்று முழங்கிய அந்த சைக்கிள்  பிரச்சாரப் பயணத்தின் வெற்றியாக அன்றைய அரசு, ஒரு சிறு தொகையை வேலையில்லா கால நிவாரணமாக அறிவித்தது. ஆண்டுகள் பல கடந்துவிட்டன. எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் சார்பில் அந்த கோரிக்கையை உயர்த்திப் பிடித்து கடந்த 10 நாட்களாக சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மையங்களிலிருந்து திருச்சி நோக்கி பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இலட்சிய உணர்வோடு வாலிபர் சங்கத்தின் வெண்கொடியை ஏந்தியவாறு மாபெரும் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை நடத்தி  வருகிறார்கள். உலகத் தொழிலாளர் தினமான இன்று  (மே 1) திருச்சியில் அவர்கள் சங்கமிக்கிறார்கள்.  இந்த சங்கமம் தமிழக இளைஞர்களை ஈர்க்கட்டும். வேலைவாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை வெல்லட்டும்.

ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)