tamilnadu

img

“திருமயம் லெனின் நகரை இடிக்க அனுமதிக்கமாட்டோம்” எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை செப்.18 -   திருமயம் லெனின் நகரை இடிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனக் கூறி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து அரசு எந்திரம் பின்வாங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லெனின் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு மேற்படி இடத்தின் முகவரியில் வீட்டு ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு, சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசால் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. மேற்படி இடத்திற்கான சர்வே எண்ணில் அரசுக்கு சொந்தமான கூட்டுறவு கட்டிடங்கள், வேளாண் அலுவலகங்கள், அரசினர் மாணவியர் விடுதி உள்ளிட்ட கட்டிடங்களும் உள்ளன. தனியார் ஒருவருக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி இடம் நீர்நிலைப் புறம்போக்கு எனக்கூறி வீடுகளை இடிக்கப்போவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் லெனின் நகர்ப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகர் கண்மாய் தற்பொழுது நீர்ப்பிடிப்பு பகுதியாக இல்லை. மேற்படி குளத்திற்கான வரத்து வாய்க்காலும், பாசனப் பரப்புகளும் குடியிருப்புகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், மேற்படி புறம்போக்கில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஓரமாக உள்ள லெனின் நகர் குடியிருப்பை மட்டும் இடிப்பதற்கு அதிகாரிகள் துடிக்கின்றனர். இந்நிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உதவியுடன் திங்கள்கிழமை ஜேசிபி எந்திரங்களோடு மேற்படி குடியிருப்பை இடிப்பதற்கு  நீர்வளத்துறை அதிகாரிகள் தயாராகினர். இதனைக் கண்டித்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு என அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்தப் போராட்டத்தையொட்டி சாலை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

அரசு எந்திரம் பின்வாங்கியது

ஒருகட்டத்தில் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு  சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்தனர். இதனைத் தொடர்ந்து திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர், வட்டாட்சியர் பொன்மலர் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டக்குழு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் மேற்படி லெனின் நகரில் குடியிருக்கும் மக்களுக்கு மூன்றுமாத கால அவகாசத்தில் மாற்று இடம் வழங்குவது எனவும் அதன் பின்னரே ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

எளிய மக்கள் மீது ஏன் இவ்வளவு ஆத்திரம்?

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.சின்னதுரை எம்எல்ஏ.. நீதிமன்றத்தைக் காரணம் காட்டி லெனின் நகர் குடியிருப்பை இடிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாவட்டத்தில் எத்தனையோ இடங்களில் பயன்பாட்டில் உள்ள நீர்நிலைப் புறம்போக்குகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் நீர்நிலைக்கான பயன்பாடு ஏதும் இல்லாத லெனின் நகர் பகுதியை இடிப்பதற்கு ஏன் துடிக்கின்றனர். இங்கே உள்ள ஊராட்சி மன்ற நிர்வாகம், லெனின் நகர் குடியிருப்பை இடிக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் லெனின் நகர் குடியிருப்பை இடிக்கக்கூடாது என உறுதியாக உள்ளனர். ஆனால், எதையும் காதில் வாங்காமல் அதிகாரிகள் திருமயம் பகுதியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். மாவட்டத்தில் பெரிய, பெரிய ரியல் எஸ்டேட் கும்பல்கள் அரசுப் புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு கோடி, கோடியாகக் கொள்ளையடித்து வருகின்றன. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள், அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை ஏவினால் அதைப் பார்த்துக்கொண்டு சிபிஎம் சும்மா இருக்காது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் எளிய மக்கள் மீது இத்தகைய தாக்குதலை தொடுப்பது நியாயமாகுமா?

பட்டா வழங்க வேண்டும்

அதிகாரிகள் மூன்று மாத காலத்தில் மாற்று இடம் தேர்வு செய்து தரும் வரை இடிக்கமாட்டோம் என பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளனர். லெனின் நகரிலேயே அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் முதன்மையான கோரிக்கையாகும் என்றார். போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திருமயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஏ.எல்.ராமு, விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் துரை.நாராயணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மணி, ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர், ஒன்றியக் கவுன்சிலர்கள் வேலு, அறிவழகன், கூட்டுறவு சங்கத் தலைவர் சரவணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர் ஜி.நாகராஜன், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தன், விசிக நிர்வாகி ரமேஷ், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகைராணி, விச ஒன்றியச் செயலாளர்  எம்.வீரமணி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.