சிறுபான்மையினருக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, ஜுன் 20- சிறுபான்மையினர் மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை, அரசு அலுவலர்கள் விரைவாக கொண்டு சேர்த்திட வேண்டும் என மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ. அருண் அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் தெரிவிக்கையில், கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், 27 பயனாளிகளுக்கு ரூ.1.51 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களும், மூன்று சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 35 பயனாளிகளுக்கு டாம்கோ கடன் திட்டத்தின்கீழ் ரூ.29.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், 10 பயனாளிகளுக்கு ரூ.67,000 மதிப்பிலான விலையில்லா திரவ பெட்ரோலிய எரிவாயு சலவைப் பெட்டிகளும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.31.58 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றார். மாவட்ட ஆட்சியர் மு.அருணா, சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.