tamilnadu

img

‘கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் தொழில்களை பாதுகாக்க முடியாது’

விருதுநகர் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

விருதுநகர், பிப்.17- இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் தொழில்களைப் பாதுகாக்க முடியாது என சிறு, குறு, நடுத்தர மற்றும் ஓரளவு பெரிய முதலாளிகள் கூறும்  நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பிப். 16  வியாழனன்று மாலை, விருதுநகர் மாவட்ட மக்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், தேனிவசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் எல்.முருகன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் துவக்கி வைத்தார்.  விருதுநகர் மாவட்ட தொழில் நிலைமை குறித்த ஆய்வறிக்கையை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, விவசாய நிலை குறித்த ஆய்வறிக்கையை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன் ஆகியோர் முன் மொழிந்த னர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முக மது, மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மேற்கண்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.  அவரது உரையின் சாராம்சங்கள் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயம் மற்றும்  தொழில்களை பாதுகாக்கக் கோரி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் சிரமத்துடன் ஒரு மாத காலம் நேரடியாக கள ஆய்வு  செய்து அறிக்கையை துல்லியமாக தயார் செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளாகிய எங்களைப் பார்த்து, தொழிலாளர்களைத் தூண்டி விட்டு ஏன் தொழிலை கெடுக்கிறீர்கள் என  முதலாளிகள் கூறுவார்கள். ஆனால், தற்போது, கம்யூனிஸ்ட்டுகளாகிய நீங்கள் இல்லாமல் தொழில்களை பாதுகாக்க முடியாது என முத லாளிகள் கூறும் நிலை வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1070 பட்டாசு ஆலைகள், 500-க்கும் மேற்பட்ட அச்சுத் தொழில்  கூடங்கள், 100-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. மேலும், விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்களும் உள்ளன. இந்த தொழில்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். தொழில் கள் இருந்தால் தான் மக்கள் பசியின்றி வாழ முடியும். நாடு முழுவதும் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் நசிந்து வருகின்றன. அதற்கு காரணம், பிரதமர் மோடி கடைப்பிடிக்கும் கொள்கை தான். மோடி அரசின் சதியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.

உலகத்தில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடு களில் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் பட்டாசுகளை விற்பனை செய்திட பாஜக அரசு அனுமதி பெற்றுத் தந்தால் விருதுநகர் மாவட்டம் தொழில் வளம்மிக்க மாவட்டமாக மாறி விடும். ஆனால் பட்டாசுத் தொழிலை நடத்த விடாமல் பல்வேறு இடையூறுகள் செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு பட்டாசால்தான் ஏற்படுகிறது என வழக்கு போடப்படுகிறது. நிலக்கரி மூலம் இயங்கும் தொழிற்சாலை களாலும், வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளிட்ட பல காரணங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. வெளிநாட்டு கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டால் மட்டும் நாடு முன்னேறாது. வளர்ச்சியில் இந்தியா விலேயே தமிழ்நாடு நல்ல இடத்தில் உள்ளது என்றால் அதற்கு காரணம் சிறு, குறு தொழில்கள் தான். எனவே, இத்தொழில்களைதொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் பேசினார். வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.முத்துவேலு நன்றி கூறினார். மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. வேலுச்சாமி, ஏ.குருசாமி, அ.விஜயமுருகன், எம். தாமஸ், எஸ்.லட்சுமி, எம்.சுந்தரபாண்டியன், கே. முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

17 லட்சம் கோடி எப்படி வந்தது?

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பிரதமர் இல்லை. அதானிக்கு வேலை செய்யும் புரோக்கராக மோடி உள்ளார். உலக பணக்காரர்களில் 3-ஆவது இடத்திற்கு அதானி வந்துள்ளார். அவரிடம் 17 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்கள் எப்படி வந்தது? முழுக்க முழுக்க மோடியின் ஆதரவுடன்  நாட்டையும் மக்களையும் ஏமாற்றி ஊழல் செய்து சேர்த்த சொத்துக்கள் தான் அவை.

தமிழ்நாட்டின் பட்ஜெட்டே இவ்வளவுதான்!

பிரதமர் மோடி, கடந்த எட்டரை ஆண்டு களில் 11 லட்சம் கோடி ரூபாய்களை பெரும் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்துள் ளார். 152 பெரு முதலாளி களுக்கு மட்டும் இந்த ரூ.11 லட்சம் கோடி வராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இது யாருடைய பணம்? தமிழ்நாட்டின் ஒரு வருட பட்ஜெட்டே ரூ.4 லட்சம் கோடி ரூபாய் தான். அரசு எதற்காக மக்களிடம் வரி வசூல் செய்கிறது? மக்களுக்கு பல்வேறு நல்ல பல திட்டங்களை போடுவதற்குத்தான். ஆனால், நரேந்திரமோடி அரசோ, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை செய்திடவே வரி போடுகிறது.

பஞ்சும் பசியும்

பஞ்சு விலை உயர்வால் விசைத்தறி, ஜவுளித் தொழில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா (இந்திய பருத்திக் கழகம்) பருத்தியை கொள்முதல் செய்யக் கூடாது எனக் கூறி விட்டு, அதானி கொள்முதல்  செய்திட அனுமதி வழங்கியுள்ளார் மோடி. இதனால்,  பருத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது. உள்நாட்டுத் தொழிற்சாலைகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நூற்பாலை, விசைத்தறி ஆலை உரிமையாளர்கள் ஒன்றிய நிதியமைச்சரை சந்தித்து முறையிட்டும் பல னில்லாமல் போய் விட்டது. அவர் பருத்தி வியாபாரத்தில் தலையிட முடியாது எனக் கூறி விட்டார். பின்பு, எதற்காக இந்த பாஜக அரசு இருக்க வேண்டும்?

வெறும் 5 ஆயிரம் கோடி போதும்!

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவே 150 டி.எம்.சி தான். ஆனால், இந்த ஆண்டு 250 டி.எம்.சி  தண்ணீர் வீணாக கடலிலே கலந்து விட்டது. காவிரி,  வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவடைந்தால் விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. விவசாயத்தில் இந்த மாவட்டங்கள் செழித்து வளரும். இதற்காக வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு வழங்கினால் போதும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் பற்றி பத்திரிகைகளில் மட்டும் தான் செய்தி வருகிறது. இத்திட்டம் தற்போது வரை முழுமை பெறவில்லை.