41 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார் இந்திய வீரர்
நியூயார்க், ஜூன் 26 - இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர். இந்திய நேரப்படி புதனன்று (ஜூன் 25) பகல் 12.01 மணிக்கு எலான் மஸ்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் ஆக்ஸியம்-4 திட்டத்தின் பெயரில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இப்பயணத்தை துவங்கியுள்ளனர். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பின்னர் வியாழக்கிழமை (ஜூன் 26) மாலை 4 மணிக்கு மேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்கியது. இந்த வீரர்கள் அங்கு 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் வாரத்திலேயே திட்டமிடப்பட்டிருந்த ஆக்ஸியம் 4 பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வீரர் சுபான்ஷு சுக்லா (39) இப்பயணத்தில் விமானியாக செயல்பட்டார். கடந்த 1984 இல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற சோவியத் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் வெளிநாட்டு வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ் சோயுஸ் டி-11 எனும் சோவியத் விண்கலம் மூலம் அப்போது இயங்கிக் கொண்டிருந்த சல்யூட் 7 (Salyut 7) எனும் சோவியத் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள், 21 மணிநேரம் தங்கியிருந்து இந்திய வீரர் ராகேஷ் சர்மா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.இவரே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர். 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணித்துள்ளார். இந்த 41 ஆண்டுகளில் இந்தியர்கள் யாரும் பயணிக்கவில்லை. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி உள்ளிட்ட சிலர் பயணித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் நேரடி இந்திய குடிமக்கள் அல்ல, இந்திய வம்சாவளியினர் ஆவர்.
பயணத்தின் காலம்
இந்த விண்கலம் காணொலிகளில் காட்டப்படும் போது சர்வதேச விண்வெளி நிலையம் நத்தை வேகத்தில் நகர்வது போன்று தெரியும். ஆனால் உண்மையில் மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில், பூமியில் இருந்து வெறும் 400 கி.மீ. உயரத்தில் சுற்றி வருகிறது. இந்த நிலையத்தை அடைய இந்த குழுவுக்கு 28 மணி நேரமாகும். இதுவே பூமியாக இருந்தால் இதே வேகத்தில் இந்த 400 கி.மீ தூரத்தை வெறும் 51.43 நொடியில் அடைந்து விடலாம். பூமியில் ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு போக பாதையை பொறுத்து நேரம் அமையும். ஆனால் சேர வேண்டிய இடம் அங்கேயே தான் இருக்கும். ஆனால் விண்வெளியில் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் ஒவ்வொரு சுற்றுப் பாதையிலும் தொடர்ந்து சுற்றிவரும். உதாரணமாக, செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகிறதே அந்த மாதிரி. அவை அப்படி சுழலவில்லை என்றால், பூமியின் ஈர்ப்புவிசையில் சிக்கி அவற்றின் திசையிலேயே சென்று அவற்றுடன் மோதிவிடும். இவ்வாறு இந்த ராக்கெட் ஒவ்வொரு சுற்று வட்டப்பாதையாக மாறி மாறி பயணித்து அந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கும் அதன் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கும் தேவையான வேகம் மற்றும் உயரத்தை அடைய வேண்டும். இந்த முழு செயல்முறையையும் ராக்கெட்டே தானியங்கி அமைப்பு முறையில் கவனித்துக்கொள்ளும். இந்த அனைத்து செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனிக்கும் பைலட்டாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவும் இத்திட்டத்தின் தலைவராக அமெரிக்க வீரர் பெக்கி விட்சனும் உள்ளனர். இதே நேரத்தில் பூமியின் ஈர்ப்புவிசையில் இருந்து வெளியேறி விண்வெளி நிலையத்தை அடைய ஃபால்கன் 9 ராக்கெட் விநாடிக்கு 11.2 கி.மீ. வேகத்தில் பயணிக்க வேண்டும். இந்த பாதை நேரானது அல்ல. ஓர் கூம்பு வெட்டு வடிவத்தில் (parabola) இருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும் கட்டம்
ஃபால்கன் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய (docking) ஒரே வேகத்திலும் ஒரே திசையிலும் பயணிக்க வேண்டும். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஸ்பீட், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஆகிய திரைப்படங்களில் மிக வேகமாக செல்லும் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றுவார்கள். அதற்காக அந்த வாகனத்தின் வேகத்திற்கு இணையாக மற்றொரு வாகனமும் பயணிக்கும். அதேபோல தான் ஃபால்கன் 9 ராக்கெட் விண்வெளி நிலையத்தின் வேகத்திற்கு இணையாக அதன்பின் ஒன்றாக பயணித்து, அனைத்துச் சூழல்களும் சரியாக இருந்தால், டாக்கிங் செயல்முறைக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அடாப்டருடன் டிராகன் விண்கலம் இணையும். (சார்ஜ் வயரை அடாப்டருடன் இணைப்பது போன்றது). இந்த செயல்முறைக்குப் பிறகும் இருபுறமும் உள்ள கதவுகள் விண்கலத்தில் உள்ள காற்றின் அழுத்தம் சமன் செய்யப்பட்ட பிறகே திறக்கும். இந்த செயல்முறை முடிந்த பின்னர், விண்கலத்தில் உள்ள விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் இறங்குவார்கள்.
பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சி
விண்வெளிப் பயணம் ஒரு நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். எனினும் அது அரசின் கைகளில் இருக்கும் வரைதான். தற்போதைய விண்வெளிப் பயணமும் கூட ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் ஆகிய தனியார் நிறுவனங்கள் இணைந்துதான் அனுப்பியுள்ளன. அந்நாட்டின் அரசுத்துறையை வளர்க்க அமெரிக்கா விரும்பவில்லை. தற்போதைய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2031இல் செயலிழந்து விடும். அதற்கு மாற்றாக ஒரு புதிய விண்வெளி நிலையத்தை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவ நாசா முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியே ‘ஆக்ஸியம் நிலையம்’. அதை நிறுவத் தேவையான 4 மாடுல்கள் (Modules) பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். பின்னர் ஐஎஸ்எஸ் செயலிழக்கும்போது இந்த மாடுல்கள் பிரிந்து, ஒரு புதிய விண்வெளி நிலையமாகச் செயல்படும். இதற்கு 2031 வரை ஆகும். ஆனால் இந்த தனியார் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை உடனே அடைய வேண்டும் என 2028க்குள் இதைச் செயல்படுத்த விரும்புகின்றன. எனவே 2026 முதல் மாடுல் விண்வெளிக்கு அனுப்பப்படும் என நாசா கூறி வருகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ‘ஆக்ஸியம் நிலையம்’ உலகின் முதல் வணிக நோக்கிலான தனியார் விண்வெளி நிலையமாக இருக்கும். இந்த லாப நோக்கத்திற்கான முன்னோட்டமாகத்தான் 2022 இல் இருந்தே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம்.
பேசப்பட வேண்டிய பிரசாந்த் பாலகிருஷ்ணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. அதற்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நால்வரில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ‘ஆக்ஸியம் 4’ திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ‘ஆக்ஸியம் 4’ திட்டத்தின் பேக்-அப் குழுவில் இருக்கிறார். ஆக்ஸியம் 4 திட்டத்தின் பிரதான 4 உறுப்பினர்களைப் போலவே இந்த பேக்-அப் குழுவின் உறுப்பினர்களுக்கும் அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும். ஒருவேளை, இறுதிக் கட்டத்தில் பிரதான உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரால் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவரது இடத்தை இந்த பேக்-அப் குழு உறுப்பினர் ஒருவர் நிரப்புவார். அப்படி ஒருவர் தான் பிரசாந்த் பாலகிருஷ்ணன்.