tamilnadu

img

அங்கன்வாடி திட்டத்தைப் பாதுகாக்க நவ.14 இல் மனித சங்கிலி

திருப்பூர், அக்.30 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் அக்டோபர் 24, 25 ஆகிய இரு நாட்கள், சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்தின மாலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய முடிவுகள் பற்றி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர். சிந்து விளக்கிப் பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் டெய்சி அறிக்கையை முன்வைத்தார். சிஐடியு மாநிலக்குழு முடிவுகளை விளக்கி சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் விளக்கிப் பேசினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: நவம்பர்  14 குழந்தைகள் தினத்தில், அங்கன்வாடி திட்டம் ஆரம்பித்து 50 ஆவது  ஆண்டு தொடங்க இருக்கிறது. 50 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட இந்த திட்டம் நிரந்தரம் ஆக்கப்படவில்லை. அதில் பணி செய்த ஊழியர்களும் நிரந்தரம் ஆக்கப்படவில்லை. எனினும் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு இணங்க இந்தத் திட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து 0 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சங்கத்தின் அகில இந்திய முடிவின் அடிப்படையில், நவம்பர் 14, குழந்தைகள் தினத்தில் “அங்கன்வாடி திட்டத்தைப் பாதுகாப்போம். அங்கன்வாடி குழந்தைகளை பாதுகாப்போம்!” என்ற அடிப்படையில் பொதுமக்களையும், குழந்தைகளின் பெற்றோர்களையும் இணைத்து வட்டார தலைநகரில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  முற்றுகைப் போராட்டம் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர், மினி மைய ஊழியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. அரசு கொடுத்த உத்தரவை. நிறைவேற்றாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.  இது சம்பந்தமாக அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. அமைச்சர் சரி செய்து தருவதாகக் கூறினார். ஆனால் இன்று வரை அது சரி செய்யப்படவில்லை. 11 மாவட்டங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் மூன்று மாவட்டங்களில் மட்டுமே  வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே மாநில செயற்குழு முடிவின்படி மீண்டும் ஒரு முறை இயக்குநர், அரசு செயலாளர்களை சந்தித்து பேசுவது, அப்படி செய்யாவிட்டால் நவம்பர் 20 அன்று தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சேர்ந்து இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முடிவில் சங்கத்தின் பொருளாளர் தேவமணி நன்றி கூறினார்.