tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம்

தஞ்சாவூர், ஜுன் 28-  தஞ்சாவூர் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சத்தியமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆர்.பிரதீஸ்வரன்(36), கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆர்.பாஸ்கர்(43), சீனிவாசநல்லூர் அண்ணா நகரைச் சேர்ந்த பி.சரவணன்(48), தஞ்சாவூர் அருகே ராமாபுரம் தோட்டக்காடைச் சேர்ந்த டி.அழகேசன்(30) ஆகியோர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து, பிரகதீஸ்வரன், பாஸ்கர், சரவணன், அழகேசன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மழை நீர் வடிகால்- நடை பாதை அமைக்கும் பணி துவக்கம்

நாகர்கோவில். ஜூன். 28- நாகர்கோவில் மாநகராட்சி 24 ஆவது வார்டுக்குட்பட்ட அவ்வை சண்முகம் சாலையில் செம்மாங்குடி சந்திப்பு முதல் விஜய் ஹோட்டல் வரையிலான சாலை ஓரத்தில் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா  முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

கூண்டில் சிக்காமல் சுற்றித்திரியும் கரடி

திருநெல்வேலி, ஜூன் 28- நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(47). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள தனது வாழைத் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு பதுங்கியிருந்த கரடி அவரை கடித்துக்குதறியது. இதையடுத்து கரடியை . பிடிக்க விடுத்த கோரிக்கை யின் அடிப்படையில் ராதாபுரம் வனச்சரக அலுவலர் பலவேச கண்ணன்  தலைமையில் வனத்துறையினர் காரியாண்டி கிராமம் மற்றும் தோட்ட பகுதிகளில் முகாமிட்டு கரடியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவக்குழுவும் வரவழைக்கப்பட்டது.  காரியாண்டிகுளம் அருகே அய்யனார் கோவில் பாறை அருகே வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இதனை தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனால்  கரடி கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

அதிக வட்டி பெற்றதுடன் பெண்ணுக்கு  கொலை மிரட்டல்: ஒருவர் கைது

அரியலூர், ஜுன் 28- திருமானூர் அருகேயுள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி தனலட்சுமி(50).  இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரத்திடம், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 50 செண்ட் நிலத்தின் பத்திரத்தை கொடுத்து ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.  தொடர்ந்து, வட்டி செலுத்திய நிலையில், மீதமுள்ள வட்டி மற்றும் கடன் தொகையை மே 24 ஆம் தேதி கொடுத்துவிட்டு பத்திரத்தை கேட்கும்போது கொடுக்க மறுத்துள்ளார்.மேலும், தனலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து, தனலட்சுமி திருமானூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், அதிக வட்டி பெற்றது, கொலை மிரட்டல் விடுத்தது என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்க.சண்முகசுந்தரத்தை கைது செய்து, அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.