tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மக்கள் நலன் சார்ந்த  கோரிக்கைகளை நிறைவேற்றுக! சிபிஎம் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர், ஜுன் 29-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், விக்கிரபாண்டியம் ஊராட்சியில் ஆற்றங்கரைதெரு சாலையில் கான்கிரிட் பாலம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் சாலை மறியல் போராட்டம் மூலகடை, சீதக்கமங்கலத்தில் நடைபெறும் என ஜனநாயக மாதர் சங்கம்- ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஜுன் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குடவாசல் வட்டாட்சியர் ஆ.ஸ்டாலின் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததின் பேரில், வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விக்கிரபாண்டியம் ஆற்றங்கரைதெரு, மேலராமன்சேத்தி இடைப்பட்ட பகுதியை இணைக்கும் முடிகொண்டான் ஆற்றில் கான்கிரிட் பாலம். விக்கிரபாண்டியம் ஊராட்சியில் உள்ள ஆற்றங்கரைதெரு சாலையையும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை. விக்கிரபாண்டியம் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் மின்விளக்குகளை சரி செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கள ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது.  இதன்பேரில், தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. லெனின், மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சீதாலட்சுமி, செயலாளர் ஜெகதீஸ்வரி, வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜூலை 9 பொது வேலைநிறுத்தம்-மறியல் : வெற்றிபெறச் செய்ய சிஐடியு முடிவு

அரியலூர், ஜுன் 29-  சிஐடியு அரியலூர் மாவட்ட அலுவகத்தில் சிஐடியு மாவட்டக் குழு கூட்டம் தலைவர் கே. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி வேலை குறித்துப் பேசினார். ஜூலை 9 பொது வேலைநிறுத்தத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து சங்கம் சார்பாக 650 பேர் மறியலில் கலந்துகொள்வது எனவும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.  சிஐடியு மாவட்ட மாநாட்டை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது, பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் மாவட்ட பேரவையை ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிப்பது  எனவும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை  பங்குதாரர்களுக்கு பங்கு மாறுதல் முகாம்கள்

தஞ்சாவூர், ஜுன் 29-  தஞ்சாவூர் அருகே, குருங்குளத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களின் பங்கு மாறுதல் முகாம்கள் ஆலை தலைமை நிர்வாகி தலைமையில் நடைபெற உள்ளது.  இதுகுறித்து, சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இந்த சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில், பங்கு மாறுதல் மற்றும் முகவரி மாறுதல் சம்பந்தமாக சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி தலைமையில் பங்கு மாறுதல் முகாம்கள் நடக்க உள்ளன. அதன்படி, ஒரத்தநாடு கோட்ட அலுவலகத்தில் ஜூலை 2 ஆம் தேதி காலை 10 மணிக்கும், மருங்குளம் கோட்ட அலுவலகத்தில் ஜூலை 3 காலை 10 மணிக்கும், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கூட்ட அரங்கத்தில் ஜூலை 4 காலை 10 மணிக்கும், தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தில் ஜூலை 5 காலை 10 மணிக்கும், கந்தர்வகோட்டை கோட்ட அலுவலகத்தில் ஜூலை 7 காலை 10 மணிக்கும், திருவையாறு கோட்ட அலுவலகத்தில் ஜூலை 8 காலை 10 மணிக்கும் முகாம்கள் நடக்கிறது. இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு ஒரத்தநாடு கரும்பு அலுவலர் புண்ணியமூர்த்தியை 9025775390 என்ற எண்ணிலும், மருங்குளம் கரும்பு அலுவலர் ஜெயராமன் 9025775356, சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் மற்றும் கந்தர்வகோட்டை கோட்டத்திற்கு துரைராஜ் 9025775355, காசிராஜா 8754045710, தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பங்குதாரர்கள் கரும்பு அலுவலர் ஜெயராமன் 9025775356 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பங்குதாரர்கள் தங்களின் பங்கு மாறுதல் மற்றும் முகவரி மாறுதல் சம்பந்தமாக கீழ்காணும் ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  அதன்படி பங்குதாரர் இறந்திருப்பின் இறப்புச் சான்றிதழ், பங்குதாரர் உயிருடன் இருப்பின் சம்மதக் கடிதம், வாரிசு சான்றிதழ், இதர வாரிசுதாரர்கள் சம்மதக் கடிதம், பங்குச் சான்று தொலைந்து இருப்பின் வழக்கறிஞரிடம் பிரமாணப் பத்திரம் பெற்றுவர வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து, மேற்கண்ட நாட்களில் சம்பந்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டு தெரிவித்துப் பயன்பெறலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9 அகில இந்திய பொது வேலைநிறுத்தம் பொன்னமராவதியில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

பொன்னமராவதி, ஜுன் 29-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறக்கோரி ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு அமைக்கும் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு விதொச ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி தலைமை வகித்தார்.  சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், விதொச பொறுப்பாளர் நல்லதம்பி, கட்டையாண்டிபட்டி குமார் ஆகியோர் பங்கேற்றனர்.  விதொச ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி, விச ஒன்றிய செயளாளர் பாண்டியன், விச ஒன்றிய தலைவர் எம்.ராமசாமி, சிஐடியு பொறுப்பாளர் குமார், புதுக்கோட்டை மாவட்ட சாலையோர விற்பனையாளர் சங்கம், சிஐடியு ஒன்றியச் செயலாளர் தீன், ஒன்றிய தலைவர் வி.ஆர்.எம். சாத்தையா, பொருளாளர் வி.எஸ்.ஆர்.கனி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் லதா, செயலாளர் மதியரசி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர் பிரசன்னா சரவணன், ஒன்றிய தலைவர் ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், ஜூலை 9 வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை பொன்னமராவதியில் விரிவான முறையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.