கேரளத்தின் வர்க்கலாவில் கடல் அலைகளின் ஏற்ற இறக்கங்களில் நளினமாக மிதக்கும் பாலத்தில் நடக்கும் அனுபவத்தை இங்கு வரும் பயணிகளுக்கு வழங்க கேரள சுற்றுலாத்துறை தயாராகி வருகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ளது வர்கலா கடற்கரை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது அலைகளுக்கு மேல் மிதக்க முடியும். தலைநகர் மாவட்டத்திற்கு சுற்றுலாத் துறையின் புத்தாண்டு பரிசாக வர்கலா கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் துவக்கி வைக்கிறார். மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கவுன்சில் (டி.டி.பி.சி.,) மேற்பார்வையில், பாபநாசம் பிரதான கடற்கரையில், தனியார் தொழில் முனைவோர் இந்த பாலம் அமைத்துள்ளனர். சுமார் நூறு மீட்டர் நீளம் அலைகளுக்கு மேல் நடந்து செல்லும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் பாலம் வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு படகுகள், லைஃப் ஜாக்கெட்டுகள், உயிர்காக்கும் மீனவர் சேவைகளும் இங்கு உள்ளன. “மிதக்கும் பாலம்” (floating bridge) என்கிற கட்டமைப்பு தண்ணீரில் மிதக்கும் உயர் அடர்த்தி பாலி-எத்திலீன் (HDPE) தடுப்புகளால் கட்டப்பட்டுள்ளது. 700 கிலோ நங்கூரம் கொண்டு பாலம் பாதுகாக்கப்படும். இருபுறமும் மூன்று மீட்டர் அகலமான கைப்பிடிகள் இருக்கும். பாலத்தின் முடிவில் 11 மீட்டர் நீளமும் ஏழு மீட்டர் அகலமும் கொண்ட பார்க்கும் தளம் (வியூ பாயின்ட்) உள்ளது. இங்கிருந்து கடலின் அழகான தோற்றத்தை நெருக்கமாக பார்க்கலாம். ஒரே நேரத்தில் 100 பேர் வரை பாலத்தில் மிதக்கலாம். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளத்தின் படகு வீடுகள் உலக சுற்றுலா வரைபடத்தில் மிகவும் பிரபலம். இயற்கை அழகும், மக்களின் உபசரிப்பும் மிகப்பெரிய சுற்றுலா வாய்ப்புகளை கேரளத்திற்கு அளித்து வருகிறது. அந்த வகையில் கடலில் மிதக்கும் பாலம் மற்றொரு வியப்பை சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கும். -தேசாபிமானியில் இருந்து சி.முருகேசன்