tamilnadu

img

இரட்டை விரட்டிய குட்டி மின்னல் - ராஜலட்சுமி நாராயணசாமி

இருட்டு  அப்படி ஒரு இருட்டு..  தருண் இதற்கு முன் இருட்டைப் பார்த்ததே இல்லை. எப்போதும் மின்சாரம் இருக்கும்.  இரவில் கூட அழகான பாண்டா கரடி வடிவிலான மின் விளக்கை எரிய விடுவார் அப்பா.  கண்ணை உறுத்தாத ஒளி. இரவில் எழுந்தால் அந்த குட்டி பாண்டாவைப் பார்க்கவே அழகாக இருக்கும். பகலில் கூட குளியலறை விளக்கை போடச் சொல்வான் தருண். “அவ்வளவு பெரிய சூரியனின் வெளிச்சம் போதவில்லையா?” என்று கேட்பார் அம்மா. ஆனாலும், விளக்கு எரியாமல் உள்ளே போக மாட்டான். மின்சாரம் இல்லையென்றாலும் கூட, மின் விளக்கு, காத்தாடி போன்றவற்றை ஒரு நாள் முழுக்க இயக்கும் அளவு மின்சேமிப்பான் இருந்தது அவர்கள் வீட்டில். அதனால் தான் தருணுக்கு இருட்டு என்றாலே என்னவெனத் தெரியாது. ஒரு நாள், ‘விண்மீன் ஒன்று பூமிக்கு அருகே வருகிறது. அதனால் பூமியில் இருக்கும் மின் சாதனங்கள் எல்லாம் செயல்படாமல் போய் விடும்’ என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து தான் அனைவரும் தெரிந்து கொண்டார்கள். ஆனால் அந்தச் செய்தியைப் பார்த்து மக்கள் ஆச்சர்யப்படுவதற்கு முன்பே எல்லா மின் சாதனங்களும் தங்களது வேலையை நிறுத்தி விட்டன. மாலை சூரியன் மறைந்ததும் இருட்ட ஆரம்பித்து விட்டது. நிலத்தடி நீரை எடுக்க இயலாமல் தண்ணீர் பஞ்சம் வந்து விட்டது. ஆறு, குளங்களெல்லாம் கழிவு நீர் கலந்து பயன்படுத்த ஏற்றதாக இல்லையாம். இரண்டு நாட்களில் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்கள் காலியாகி விட்டன. யாராலும் வாகனங்களைப் பயன்படுத்த முடியவில்லை.  அனைவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.  இரவு உணவை 6 மணிக்கே உண்டார்கள்.  காலையில் 7 மணிக்கே பள்ளிகள் திறக்கப்பட்டன. 2 மணி வரை பள்ளி. கல்லூரிகளும் அலுவலகங்களும் கூட விரைவிலேயே முடிந்து விட்டன. அப்பா, அம்மா இருவரும் தருணோடு நிறைய நேரம் செலவழித்தனர்.  இதெல்லாம் தருணுக்கு பிடித்திருந்தது.  ஆனால் இருட்டு மட்டும் பிடிக்கவே இல்லை.  அப்போது தான் முதன் முதலில் அதைப் பார்த்தான். ஒளிரும் பூச்சிகள்.  அவர்களது வீட்டு மொட்டை மாடியில் உறங்க சென்றார்கள். தென்னை மரத்தில் மஞ்சள் நிறத்தில் சின்னச் சின்னதாய் ஒளி.  “அம்மா அது என்ன?” எனக் கேட்டான். “இது தான் மின்மினிப் பூச்சிகள். அவை உடலில் இருந்து ஒளியை உமிழ்கின்றன” என்றார் அம்மா.  ‘மின்மினிப் பூச்சிகளிடம் தான் வெளிச்சம் கொடுக்கும் வழி உள்ளது’ என நினைத்தான் தருண்.  அனைவரும் உறங்கிய பின், மின்மினிப் பூச்சிகள் எங்கோ செல்வதைப் பார்த்தான்.  அவற்றை பின் தொடர்ந்து சென்றான். ஊரைத் தாண்டி சென்றன. காட்டைத் தாண்டி சென்றன.  மலை மேல் ஏறிச் சென்றன. அங்கே தான் மின்னல்கள் விளையாடிக் கொண்டு இருந்தன.  மின்மினிப் பூச்சிகள் மின்னல்களோடு விளையாடுவதைக் கண்டான். ஒரு மின்னலைப் பிடித்தால் தன் வீட்டில் இருள் போய் விடும் என நினைத்தான்.  யாருக்கும் தெரியாமல் ஒரு குட்டி மின்னலைப் பிடித்தான். அதை பத்திரமாக தன் கைகளுக்குள் பதுக்கிக் கொண்டு மலையில் இருந்து இறங்கினான். காட்டைத் தாண்டி வந்தான். சட்டைப் பையில் இருந்த மின்னலால் நல்ல வெளிச்சம் கிடைத்தது.  வழி தவறாமல் நடக்க முடிந்தது. தன் வீட்டுக்கு வந்து மின் சேமிப்பானில் மின்னலை வைத்தான். அவ்வளவு தான் பெரிய ஒளியோடு ஒலியும் சேர மின்சேமிப்பான் செயல்படத் தொடங்கியது. தருணின் வீட்டில் பரவிய ஒளி பக்கத்து வீடுகள், ஊர், மாநிலம், நாடு என அடுத்தடுத்து பரவத் துவங்கியது. எப்படி மின்சாரம் திரும்பியதென யாருக்குமே தெரியவில்லை. தருணையும் மின்னலையும் தவிர. ம்ம்ம் ம்ம்ம் மின்மினிப் பூச்சிகள் தருணைப் பார்த்து சிரிக்கின்றன.  மின்மினிப் பூச்சிகளும் அறியும் அல்லவா!

;