சீனாவின் கணித வளர்ச்சி என்பது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கணிதமாகவே இருந்தது. மேலும் புதிர்களின் வழி விடுவித்தல் போன்றவையாகவே இருந்தன. அதனால் பெரிய மேம்பாடு எதுவும் கணிதத்தில் ஏற்படவில்லை. பாஸ்கலின் முக்கோணம் அளவிற்கு வளர்ந்த சீன கணிதம் அடுத்த சில நூற்றாண்டுகள் தேக்கநிலையை அடைந்தது. இதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு இந்திய கணிதவளர்ச்சி காரணமாக இருக்கலாமா என்பதை நாம் இந்திய கணிதவளர்ச்சியிலிருந்து காணலாம். இந்தியாவில் இதுவரை கிடைத்திருக்கிற கணித நூல்களில் பழமையானது சுல்ப சூத்திரங்கள் என்னும் நூலாகும். இந்த நூலை எழுதியவர்கள் பௌதாயனர்,ஆபஸ்தம்பர், மானவர், காத்யாயனர். இவர்களை பற்றிய செய்திகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் காலம் கி.மு 500க்கு முற்பட்டதாக இருக்கலாம். ஆரியர்களின் வழிபாட்டில் வேள்வி மாடங்கள்(altar) முக்கியமானவையாகும். மிக சரியான அளவுகளை கொண்ட வேள்வி மாடங்களை எப்படி அமைப்பது என்பதை விளக்குவதே சுல்ப சூத்திரங்கள் ஆகும். வேள்விகளில் பல வகை உண்டு அவற்றில் நித்யம், நைமித்திகம், காமம்யம் என்பவையும் உண்டு. இவை தினமும் செய்ய வேண்டியவை. மேலும் குறிப்பிட்ட நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். இவை குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து செய்யக் கூடியவையாகும். ஸோமயாகம் போன்ற வேள்விகளுக்கு கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகைக் குண்டங்கள் வேண்டும். இவற்றுள் கார்ஹபத்யாக்னி குண்டம் வட்ட வடிவமாகவும், ஆஹவனீய குண்டம் சதுரவடிவமாகவும், தட்சிணாக்கினியின் குண்டம் அரைவட்ட வடிவமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இவை மூன்றின் பரப்பளவும் சமமாகவே இருக்க வேண்டும். இதுபோன்ற அளவுமுறைகளையும், வடிவ ஒழுக்கங்களையும் ஆராயும் போது அவர்களுக்கு பலவிதமான அமைப்பு முறைகள் தெரிந்திருந்தன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. கொடுக்கப்பட்ட இரு சதுரங்களின் பரப்புகளின் கூட்டுத்தொகைப் பரப்பாக கொண்ட சதுரத்தை உருவாக்குதல். கொடுக்கப்பட்ட இரு சதுரங்களின் பரப்புகளின் வித்தியாசத்தைப் பரப்பாக கொண்ட சதுரத்தை உருவாக்குதல் கொடுக்கப்பட்ட பரப்பிற்கு சமமான பரப்பும், குறிப்பிட்ட நீள அளவும் கொண்ட செவ்வகத்தைஉருவாக்குதல். கொடுக்கப்பட்ட செவ்வகத்தின் பரப்பிற்கு சமமான பரப்புடைய சதுரத்தை உருவாக்குதல். மேலே கொடுக்கப்பட்ட கணக்குகளில் பெரும்பாலனவை பித்தகாரஸ் தேற்றத்தை பயன்படுத்தியே தீர்க்கப்பட்டுள்ளன. இது பித்தகாராஸ் பிறப்பதற்கு முன்பாக 200 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தியவர் பௌதாயனரே. அவர் சதுர வடிவ யாக குண்டத்தை உருவாக்குவது எப்படி என்பதை விளக்குகிறார். இதற்காக அவர் கயிறுகளை பயன்படுத்துகிறார். உருவாக்க வேண்டிய சதுரவடிவ யாக குண்டத்தின் பக்க அளவைப் போல் இரு மடங்கு அளவுள்ள கயிறை எடுத்துக்கொள்ள வேண்டும். (A,B) கயிற்றின் மையப் புள்ளியை குறித்துக் கொள்ளுங்கள்.(c) இம் மையப் புள்ளியிலிருந்து பாதிக் கயிற்றின் நான்கின் ஒரு பங்கு அளவை அளந்து குறிட்டுக் கொள்ளுங்கள். (D) இப்போது கயிறை 3,5 அலகுகள் நீளமுள்ள இரு பகுதிகளாகப் பிரிப்பதை பார்க்க முடியும். இப்போது கயிற்றின் இரு முனைகளையும் கிழக்கு, மேற்காக இணைத்துவிடுங்கள். (A,B) கயிறில் கடைசியாக குறிட்ட (D) புள்ளியை பிடித்துக் கொண்டு கயிறை தொய்வில்லாமல் Bலிருந்து தெற்கு நோக்கி இழுக்கவும். இதனால் கிடைக்கும் கோணம் (A,B,D) ஆனாது செங்கோணமாய் இருக்கும். இனி (A,B)ஐப் பக்கமாகவும், (A,B,D)ஐ செங்கோணமாகவும் கொண்டு சதுர வடிவ யாககுண்டம் எளிதில் உருவாக்கிடலாம். இப்படி உருக்குகிற சதுரம் மிக மிக நேர்த்தியாக இருக்கும். பௌதாயனர் பாடல் ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே” (இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பா கம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.) கயிறை பின்பற்றி இவ்வாறாக சதுரம், செவ்வகம், முக்கோணம், அரைவட்டம் போன்ற குறிப்பிட்ட வடிவில் உருவாக்குவதால் இதற்கு சுல்ப சூத்திரங்கள் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேதகாலத்தில் இவை தவிற மற்றவை எவ்வாறு வளர்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. வேதகாலத்திற்கு பின்னர் மக்களுக்கு கல்வி போதனையில் ஈடுபட்ட பௌத்தம், சமணம் கணக்கோடு கை கோர்க்கலாம்.