tamilnadu

img

சிங்காரவேலர் கொண்டாடிய மே தினத்தின் நூற்றாண்டு - கே.ஆறுமுகநயினார்

தொழிலாளர்களின் உழைப்புக்கு உரிய கூலி முழுமையாக வழங்கப்படுவதில்லை.  குறைவான கூலி கொடுப்பதால் மீதமாகும் உபரித் தொகைதான் முதலாளிக்கு லாபமாக கிடைக்கிறது.  அந்த லாபமானது மீண்டும் மூலதனமாக மாறுகிறது. நேற்று உழைத்த உழைப்பின் உபரிதான் மூலதனம்.  செத்துபோன உழைப்பு, மூலதனம் என்னும் இரத்தக்காட்டேரியாக மாறி மீண்டும் தொழிலாளர்களின் இரத்தத்தை குடிக்கிறது என மாமேதை மார்க்ஸ் குறிப்பிட்டார். முதலாளிகள் லாபத்தை அதிகரிக்க வேண்டுமெனில் அவர்கள் முன்பு இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பது அல்லது வேலை நேரத்தைக் கூட்டுவது. எனவே வேலை நேரம் அதிகரிப்பு (வேலைப்பளு) என்பது லாபத்தை அதிகமாக்க அவசியமானது.  வேலைப்பளுவை அதிகரிக்க முதலாளிகளும் வேலை நேரத்தைக் குறைக்க தொழிலாளர்களும் உலகம் முழுவதும் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் வழியாக உருவானதுதான் 8 மணி நேரமே வேலை. உழைப்பாளி வர்க்கம் உருவானது முதல் 8 மணி நேர வேலை என குரலும் ஒலிக்கத் தொடங்கியது.  மார்க்ஸ், ஏங்கல்சால் உருவாக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் சங்கம் வேலை நேரம் 8 மணி நேரமே என கோரிக்கை எழுப்பியது.

சாசன இயக்கம்

அதிக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்ட இங்கிலாந்தில் தொழிலாளர்கள் 16 மணி நேரம், 18 மணி நேரம், 20 மணி நேரம் கூட கடுமையாக வேலை வாங்கப்பட்டனர்.  தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுடன் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது முக்கிய முழக்கமாக இருந்தது.  சாசன இயக்கம் உருவானபோது, வேலை நேரம் 10 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும் எனக் கோரியது.  இதற்கென இங்கிலாந்து முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.  முதன்முதலாக 1847இல் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் 10 மணி நேரம் என இங்கிலாந்து அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தது. அதற்கு பின் 9 மணி நேர வேலை என்ற கோரிக்கை வந்தது.  மார்க்ஸ், ஏங்கல்ஸ் வழிகாட்டுதலில் உருவான சர்வதேச தொழிலாளர் சங்கம்தான் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன் வைத்தது.

சிகாகோ போராட்டம்

8 மணி நேர வேலைக்கான கோரிக்கையை அமெரிக்கத் தொழிலாளர்கள் 1867ஆம் ஆண்டு முதலே எழுப்பி வந்தனர்.  ஆங்காங்கே எழுப்பப்பட்ட முழக்கம் நாடு முழுவதும் பரவியது.  1882ஆம் ஆண்டு அமெரிக்காவில் துவக்கப்பட்ட தொழிலாளர் சம்மேளனம் 8 மணி நேர வேலையை பொதுக்கோரிக்கையாக மாற்றியது.  1886 மே 1ஆம் தேதி சிகாகோவில் 8 மணி நேர வேலைக்கான போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  1 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 80000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். மே 3ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.  இந்த தாக்குதலை கண்டித்து மே 4ஆம் தேதி சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில்  போலீசார் தாக்குதல் தொடுத்தனர்.  குண்டு வீசப்பட்டது.  அதையொட்டி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு தூக்குதண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடும் உழைப்பு தண்டனையும் வழங்கப்பட்டது.  இந்த தண்டனைக்கு எதிராக அமெரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.  வழக்கில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. 4 தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

மே தினம்

சிகாகோவில் 8 மணி நேர வேலைக்காக போராடியவர்களுக்கு நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டது.  1789இல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழா 1889இல் பாரீசில் நடைபெற்றது.  18 நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் தலைவர்கள் ஒன்று கூடிய ‘தொழிலாளர்களின் நாடாளுமன்றம்’ நடைபெற்றது.  தோழர் ஏங்கல்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை உலகம் முழுவதும் நடத்துவது எனவும், 1890 மே 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் எனவும் அறைகூவல் விடப்பட்டது. அதுமுதல் மே 1ஆம் நாள் உலகத் தொழிலாளர் தினமாக, 8 மணி நேர வேலை உரிமையின் அடையாளமாக, தொழிலாளர்களின் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.  நாடு, மதம், இனம், மொழி கடந்து உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே திருவிழா, மே தினம் மட்டுமே.

இந்தியாவில் மே தினம்

இந்தியாவில் நவீன தொழிலாளர்கள் உருவான காலத்திலேயே 8 மணி நேர வேலைக்கான போராட்டமும் துவங்கிவிட்டது. 1853இல் இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து பம்பாய்க்கும்-தானாவிற்கும் இடையே துவங்கப்பட்டது.  ரயில்வே விஸ்தரிக்கப்பட்டது.  ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள், இருப்புப் பாதை, பராமரிப்பு பட்டறைகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன.  மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் உள்ள ரயில்வே தொழிலாளர்கள் 1862ஆம் ஆண்டே 8 மணி நேர வேலை கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர். சிகாகோ போராட்டத்திற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் 8 மணி நேர வேலை கேட்டு போராட்டம் நடைபெற்றது.  உழைப்பாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், எழுப்பும் கோஷங்களும் சுரண்டலுக்கு எதிராகவே இருக்கும்.  சுரண்டலை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் தத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் போராடவில்லை.  தங்களது

சொந்த அனுபவத்தில் இருந்தே போராடுகின்றனர்.  எனவேதான் உழைப்பாளிகளுக்கு தத்துவ ஆயுதத்தை கொடுத்த மார்க்சும், ஏங்கல்சும் சுரண்டலுக்கு எதிராக ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என முழக்கமிட்டனர். இந்தியாவில் அந்த முழக்கத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்.  1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் செங்கொடியை ஏற்றி மே தின கொண்டாட்டத்தை இந்தியாவில் துவக்கி வைத்தார்.  மே 1 ஆம் தேதி சென்னை கடற்கரையில் இரண்டு இடங்களில் கொடியேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு திருவல்லிக்கேணி கடற்கரையில் தொழிலாளர் விவசாயி கட்சியை துவக்கினார்.  8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர் விவசாயி கட்சியின் கொள்கைத் திட்டத்தின் முழக்கமாக இருந்தது.  8 மணி நேர வேலைக்காக சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. இன்றைக்கும் நாம் போராடிக் கொண்டிருக்கிற சங்கம் அமைக்கும் உரிமை, சட்டப்படி வேலைநிறுத்த உரிமை, தொழிற் தகராறை தீர்க்க சமரச அமைப்பு, தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி, மருத்துவ வசதி, பிரசவகால விடுப்பு போன்றவை கட்சியின் செயல் திட்டமாக அறிவிக்கப்பட்டது. சிங்காரவேலர் கொண்டாடிய மே தினத்தின் நூற்றாண்டு இது. அவர் எழுப்பிய முழக்கங்களும், அவரது லட்சியங்களும் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. தோழர் சிங்காரவேலரின் லட்சியங் களுடன் மே தின பயணம் தொடரட்டும்.