மதுரை:
பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள், புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக பொருட்கள் வாங்க பள்ளி ஒன்றுக்கு 45 ஆயிரம் ரூபாயும், நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க 5 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாகவும், ஆனால் தரம் குறைந்த ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நிகழ் கல்வியாண்டில் வாங்கப்பட்ட ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடுவதோடு, நிகழாண்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.