tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை

மேட்டூர், ஜூன் 29 - மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டிய நிலையில், மிக விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் காவிரி பாயும் 11 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநில மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த வாரம் நிரம்பின.

திருச்சி விமான நிலையத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 29 - திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிறன்று அதிகாலை, திருச்சி விமான நிலைய இயக்குநர் மற்றும் திருச்சியில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையம் சார்ந்தவர்களின் மின்னஞ்சல்களுக்கு, “வெடிபொருட்கள் உடனடியாக வெளியேறுங்கள். விமான நிலையம் மற்றும் விமானங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள குப்பைகளுக்குள் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகள் நாங்கள், “ரோட்கில்” (Roadkill) மற்றும் ‘கியோ’ (Kio)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த விமான நிலைய மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார் விமான நிலைய முனையம், வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து விமான நிலைய மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.