சென்னை,பிப்.17- வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ விநியோகம் செய்தாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கும் பருவ நிலை மாற்றத்திற்கும் மிகப்பெரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்காக உள்ளது. இந்தநிலையில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘2021 ஆகஸ்டு மாதம் ஒன்றிய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1 ஆம் தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகிய வற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. உதாரணமாக பிளாஸ்டிக் காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்டிரா, ஸ்பூன் போன்றவையும் இந்த தடையில் அடங்கும். இவை தவிர, பத்திரிகை கள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரா னுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பி.வி.சி. பேனர்கள் ஆகியவையும் அடங்கும். ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரும் உத்தரவுக்கு முன்னதாக அதாவது ஜூன் 30 ஆம் தேதிக்குள் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணி கர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகளில் உள்ள விற்பனை கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகு மேற்கண்ட பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ வினியோகம் செய்தாலோ சோதனை செய்யும் போது பிடிபட்டால் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.