ஆதி திராவிட நலத்துறையில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம்
தஞ்சாவூர், ஜுன் 22- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில், தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம், அகரப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்-1, பட்டுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவிற்கு, தலா-1, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கீழப்புனவாசல் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் பாடப்பிரிவிற்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்-1 என 5 காலிப்பணியிடங்களும். அகரப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு 1 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம், நடுவிக்குறிச்சி, கல்லூரணிக்காடு, புதுக்குடி, மானோஜிப்பட்டி, முத்துவீரக் கண்டியன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிகள், சின்ன காங்கேயம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் தலா-1 என 6 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும். திருமலைராஜபுரம், நல்லாடை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் தலா-1 என 2 ஆங்கில பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும் என 9 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேற்கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (M.A., & M.Sc.,) ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் B.Ed., முடித்திருத்தல் வேண்டும். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு (B.A.,& B.Sc.,) ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் B.Ed., முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000/-, முதுகலை பட்டதாரி கணினி பயிற்றுநர் ஆசிரியர்களுக்கு ரூ.15,000/- மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/- ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவே, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்று நகல்களுடன், ஜுன் 23 முதல் 26 வரை பிற்பகல் 5 மணிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தஞ்சாவூர் - 613 010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முதல்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பொது வேலை நிறுத்த மண்டல ஆயத்த மாநாடு
நாகர்கோவில்.ஜூன். 22- தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை குறுக்கு வழியில் அமலாக்க துடிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கான அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொதுவேலை நிறுத்த மண்டல ஆயத்த மாநாடு குமரி மாவட்டம் நாகர்கோவில் இறச்சகுளத்தில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்கமோகனன், எல்பிஎப் மாவட்ட செயலாளர் சி.ஞானதாஸ் பொன். ராஜா, ஐஎன்டியுசி தலைவர் எஸ். முத்துகருப்பன். எச்எம்எஸ் அமைப்பு செயலாளர் ஆர்.சுசீலா. ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் எஸ்.அனில்குமார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் சவுத்திரி . எல்எல்எப் மாவட்ட செயலாளர் கிறிஸ் ஜெரால்ட் . எம்எல்எப் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் யுடியுசி மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினார். தொ.மு.ச அமைப்புச் செயலாளர் ஆ.தர்மன்,எச்எம்எஸ் மாநில தலைவர் எம்.சுப்ரமணிய பிள்ளை, சிஐடியு மாநிலச் செயலாளர் எம். ஐடாஹெலன்,ஏஐசிசிடியு மாநிலத்துணைத்தலைவர் அந்தோணிமுத்து, எல்எல்எப் மாநில அமைப்பாளர் பேரறிவாளன், ஏஐடியுசி மாநில தலைவர் எஸ். காசி விஸ்வநாதன், எம்எல்எப் மாநில துணைச்செயலாளர் ஏ. சந்திரன், யுடியுசி செயலாளர் டேவிட் அலெக்சாண்டர், ஆகியோர் பேசினர். மாநாட்டில் நான்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
குமரிக்கு வரும் காவலர்கள் தங்குவதற்கான விடுதி திறப்பு
நாகர்கோவில். ஜூன். 22- கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முயற்சியில் வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளூர்களில் இருந்து அலுவல் நிமித்தமாக கன்னியாகுமரிக்கு வருகை தரும் காவலர்களுக்கு பயன்படும் வகையில் காவலர் தங்கும் விடுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் திறக்கப்பட்டது. இந்த காவலர் ஓய்வு இல்லத்தில் காவலர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில் அறைகளில் படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கன்னியாகுமரிக்கு வருகை தரும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள 9498101905 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவலர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வின் போது கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் ரகு பாலாஜி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் 15 நாட்கள் சிறப்பு முகாம்
தென்காசி, ஜூன்.23- தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பான திட்டங்களின் பயன்களை எளிதில் தெரிந்து கொள்ள ஆதார் எண் மற்றும் நில உடமை விபரங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் நோக்கத்தோடு கிராமங்கள் தோறும் ஜூன் 23 முதல் 15 தினங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் வேளாண்மை துறை/தோட்டக்கலைத்துறை/ வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பணியாளர்கள்/ அட்மாதிட்ட பணியாளர்கள்/ பயிர் அறுவடை பரிசோதகர்கள், விவசாயிகளின் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல் நம்பர், ஆகியவற்றை கொண்டு தங்கள் நில உடமை விவரங்களை பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து விவசாயிகள் பயன்பெற அடையாள எண் பெறுவது அவசியம். எனவே 15 தினங்களுக்குள் விவசாயிகள் தங்கள் கிராமத்தில் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு உரிய விவரங்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தூத்துக்குடி, ஜுன் 22- தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தில் தேர்தல் மூலம் சங்கத் தலைவராக எஸ்.பி. வாரியார் துணைத் தலைவராக சிவசங்கர், செயலாளராக செல்வின், இணைச் செயலாளராக பாலகுமாரன், பொருளாளராக கணேசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கனி திருமண மண்டபத்தில் நடந்தது. மூத்த வழக்கறிஞர் ஏ.டபுள்யூ.டி. திலக் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் தனசேகர் டேவிட் தலைமை வகித்து, புதிய தலைவரான எஸ்பி வாரியாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.