எடுத்துக்கட்டி ஊராட்சியில் பாசன வாய்க்காலை தூர்வாரிய விவசாயி
மயிலாடுதுறை, ஜுன் 29- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், கடைமடை பகுதி விவசாயிகளின் நலன் கருதி பொதுப் பணித்துறை சார்பில் காவிரி ஆறு, அதன் கிளை ஆறுகளான வீரசோழன் ஆறு, மஞ்சள் ஆறு, மகிமலை ஆறு, உப்பனாறு, நண்டலாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகள், பாசனம் மற்றும் வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு இருந்தது. தற்போது, காவிரி டெல்டா கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்து, ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் எடுத்துக்கட்டி ஊராட்சி ஆத்துப்பாக்கம் பகுதியில் வீரசோழன் ஆற்றில் இருந்து பிரியும் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தும், ஆத்துப்பாக்கம் வாய்க்கால் தூர் வாராமல் புதர்கள் மண்டி கிடந்தது. அதனை அப்பகுதி விவசாயி ஒருவர், தனது சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 மீட்டர் தூரம் வாய்க்காலை தூர்வாரினார். இதனால், சுமார் 150 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.