சென்னை, மார்ச் 24 - மார்ச் 28,29 தேதிகளில் நடைபெற வுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் வியாழனன்று (மார்ச் 24) செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: ஒன்றிய அரசின் கொள்கையால் ஒன்றிய அரசு ஊழியர்கள் துயரின் பிடியில் சிக்கி வருகின்றனர். எனவேதான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரு கிறோம். முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஊழியர்களின் ஊதியம் பெருமளவு குறைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களுக்கு 40 விழுக்காடு ஊதிய வெட்டு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலை 967 ரூபாயாக உயர்ந்துள்ளது. இலங்கையைப் போன்று இந்தியாவும் மாறி வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
தபால் துறையை அழிக்க சதி
தபால்துறையை தனியாருக்கு கொடுக்க 4 கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்கின்றனர். பாதுகாப்புத்துறையில் உள்ள 42 தளவாட உற்பத்தி நிறுவனங் களை தனியாருக்கு கொடுக்க 7 நிறுவனங் களாக மாற்றியுள்ளனர். ரயில் நிலையம், தண்டவாளம், ரயில்கள் மற்றும் ரயில்வே சொத்துக்களை தனியாருக்கு கொடுக்கின்ற னர். இவற்றையெல்லாம் கண்டித்து மார்ச் 28-29 தேதிகளில் பொதுவேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த வர்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழு வதும் 12.50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். வடகிழக்கு, மேற்கு ரயில்வே ஊழியர்கள், எல்ஐசி, வங்கி போன்ற பொதுத்துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 1.50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் உள்ளிட்டு 40 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், 135 நாட்களாக உயராத பெட்ரோலியப் பொருட்களின் விலை திடீரென உயர்கிறது. அதற்கு ரஷ்ய-உக்ரைன் போரை காரணம் காட்டுகிறார்கள். அந்நாடுகளில் இருந்து 0.1 விழுக்காடு கச்சா எண்ணெய்யைத்தான் இந்தியா கொள்முதல் செய்கிறது. எனவே, ஒன்றிய அரசு மக்களை ஏமாற்றுகிறது என்றும் அவர் சாடினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்.பி.சுரேஷ், சாம்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.