tamilnadu

img

சிறகு விரிக்கச் செய்யும் பயணங்கள்

ஆன்மீகப் பயணம் முதல் அறிவுத் தேடலுக்கான பயணம் வரை பல்வேறு வகையான பயணங்கள் இருக்கின்றன என்றாலும் பயணங்கள் என்றுமே மனதிற்கு மகிழ்ச்சி தருபவை!‘ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே’ எனும் பாடல் போல் மனதிற்கு இதம் தருபவை ! ‘நாலு சுவரே சொர்க்கம்’ என வாழ்வோர் இதை உணர முடியாது என்பதை நானறிந்த பலரும் கூறுவர்.எண்ணையில் பொரியும் மீன் வாசமும் வெந்து கொண்டிருக்கும் மாமிச மணமும் துர்மணமாக தெரிந்து சுவாசத்தை தொந்தரவு செய்ய கதவை இழுத்து மூடி, பிறகு அதை சமைக்கும் மனிதர்களின் சவகாசமே தொந்தரவு என உள்ளொடுங்கும் மனிதர்களும், மாமிசம் சாப்பிட்டாலும் அதிலும் உயர்வு தாழ்வு சிந்தனை விருப்பு வெறுப்புக்கு வித்திட சக மனிதர்களை ஒதுக்குபவர்களும் கூட இதன் சுகம் உணர முடியாது என்பதையும் எளிதில் இதில் மாற்றம் காண பயணம் உதவும் எனவும் கூறுவர். ஏனெனில் அவர்கள் அனைவரும் நினைக்கும் போது பயணம் மேற்கொள்பவர்கள்!அவர்கள் கூறுவது போல குண்டுமழை பொழியும் ஆபத்தான இடமான காஷ்மீரில் தான் படகு இல்லங்களில் வாழ ஏக்கம் தரும் அழகிய ஏரிகளும் நிறைந்துள்ளன! அந்தக் காலம் துவங்கி இன்று வரை சினிமாவின் நாயக நாயகிகள் தவறாமல் பனிச்சறுக்கு விளையாடும் சிம்லா நாமும் இணைந்து படுத்துருளத் தோன்றும் பனிப்பாய்கள் நிறைந்தவை!

உலகின் மிகப் பெரும் பாலைவனமான சஹாராவும், உலகிலேயே அதிக மழை பொழியும் சிரபுஞ்சி நம்நாட்டின் இருப்பதும். இந்து மத நம்பிக்கைக்கு இடமளிக்கும் பத்ரிநாத் ஒரு விதம் என்றால் உலக அதிசயம் என நின்று காதலின் உன்னதம் பேசும் இஸ்லாமிய மன்னரால் கட்டியெழுப்பப் பட்ட தாஜ்மஹால் இன்னொரு விதம்!‘குண்டு தீரும் வரை சுட்டேன்’ என்று கொக்கரித்து நூற்றுக்கணக்கான மக்களை கொன்றழித்த பிரிட்டிஷார் சமீபத்தில் மன்னிப்பு கேட்ட பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளின் நினைவு சின்னம் ஒரு புறமென்றால் மறுபுறம் பிரிட்டிஷ் ஆதிக்கம் எதிர்த்து பீரங்கி தாக்குதல் நடத்த திப்புசுல்தான் கட்டி வைத்த கோட்டைகள் தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருப்பதும் அதிசயமே!இங்கெல்லாம் நாம் காணும் மனிதர்களில் விமானத்தில் பறந்த படி பணத்தை அள்ள நொடிக் கணக்கு போட்டிருக்கும் கொள்ளையர்கள் ஒரு புறம் என்றால் தோல் சுருக்கம் கொண்டு கிள்ளி வைக்க பணமின்றி கடும் உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி உயிர் பிழைக்கும் பஞ்சைப் பராரிகள் மறுபுறம் என பயணங்கள் பலவிதமான மக்களை நமக்கு அறிமுகம் செய்து அனுபவங்களை அள்ளி சொரிகிறது!

பல்வேறு அலுவல் காரணமாக பல ஊர்களுக்கு சென்றுள்ள போதிலும் வெறுமனே ரசிக்கவும், களிக்கவும், அனுபவங்கள் பெறவும் என சமீபத்தில் மேற்கொண்ட சிறு பயணமே நண்பர்களின் இந்தக் கூற்றுகள் அனைத்தும் உண்மை என்பதை எனக்கு உணர்த்தியது.‘சோ’ வென பெய்யும் பெருமழை போல் தலையில் தாளம் தட்டும் அருவிகள், கண்களை அகற்ற இயலாத அளவில் அழகை அள்ளி சொரியும் ஆறுகள், கால் நனைத்துச் செல்லும் கடல் அலையின் பேரழகு... ஆயுள் உள்ளவரை மனதை விட்டு நீங்காதவையாகின!பாரதியின் கவியழகு தந்த தைரியம் போல பலமடங்கு தைரியம் தந்த வீரப்பெண்மணி குயிலி,வெள்ளையரின் படை எதிர்த்த தற்கொலைப் படை வீராங்கனை! அவரைப் பற்றிய பதிவுகள் மயிர்க்கூச்செரியும் வீர அனுபவம்! கோவை சிறையில் செக்கிழுத்த செம்மல் வஉசியின் இல்லத்தில் கால்பட்டதும் ஏற்பட்ட பரவசம் சுயநல மனதை காணாமல் அடித்தது!பல்வேறு வகையில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் காரணமாய் நம் மனதில் நின்றுள்ள சுதந்திரப் போராட்ட நாயகர்களுக்கு மத்தியில் பாடநூலில் கூட படித்த நினைவற்ற வகையில், மிக எளிய மனிதர்கள் மத்தியிலிருந்து உருவாகியுள்ள வீரர்கள் ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன், ஆகியோர் பற்றிய நினைவுப் பதிவுகள் அவர்களின் சிலைகள் உருவாக்கிய உணர்வலைகள் அளப்பரியது!அப்பயணத்தை அனுபவிக்க உதவிய நடுத்தர வாழ்வில் உள்ள அன்புநிறை நண்பர்கள் மட்டுமல்ல, அழகுமுத்துக்கோன் மண்டபத்தில் சந்தித்த மிகமிக ஏழ்மையும் கூன் விழுந்த உடலும் முற்று முழுதான வயோதிகமும் கொண்ட அன்பு நிறைந்த பெண்மணி கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடமும் ஏராளம்!

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அவரது உறவினர் எனக் கூறி பழங்கதைகள் பல பகிர்ந்த நண்பரைப் போலவே இராமாயண மகாபாரதம் முதல் புராண கதைகள் வரை வாழ்வியல் அனுபவம் சார்ந்து புரிந்து கொள்ள உதவும் வகையில் மடை திறந்த வெள்ளமாய் கொட்டிய இடிந்தகரை மீனவரின் பேச்சுகளும் மிக அழகு!செம்மீன் நாவலில் வாசித்தறிந்த மீனவர்களின் கடும் உழைப்பை, வாழ்வை, அறிவை, ஆற்றலை நேரில் மிக நெருங்கிப் பார்க்க கிடைத்த வாய்ப்பு சினிமாவில் காட்டுவது போல் முரட்டுத்தனமும் பேதமையும் கொண்ட வாழ்வல்ல அது எனும் தெளிவைத் தந்தது. அம்மக்களின் உண்மை வாழ்வை ஏதோ ஒரு துளியளவாவது அறிந்து கொள்ள உதவி பயணமது!மிகச் சிறு பயணமே இத்தனை இன்பங்களை, அனுபவங்களை அள்ளித் தரும் என்றால் இவ்வுலகம் மிகப் பெரிதாயிற்றே! நண்பர்கள் கூறியது போல் இவ்வுலகம் எத்தனை அழகுகளை தன்னகத்தே கொண்டது! ‘சொல் புதிது செயல் புதிது’ என்பது போல் இது போன்ற பயணங்களையே வேறு பல வகைகளில் மேற்கொள்பவர்களும் இம்மண்ணில் உள்ளனர்.அவர்களில் குழந்தைகளுக்கான படைப்புகளை தந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் விழியன், கஜா புயல் தாக்குதலின் போது தனது குடும்பத்துடன் மேற்கொண்ட விடுமுறை கால பயணம் மிக வித்தியாசமானது. தனது குழந்தைகளுக்கும் தான் வாழும் சூழலுக்கு முற்றிலும் புதியதான ஒரு வாழ்வியல் அனுபவத்தைக் காட்டியதும், புயல் பாதிப்பிற்காளாகிய சிறுவர் சிறுமியர்க்கு வேறொரு உலக அறிமுகம் எனும் வகையில் புத்தக உலகை அறிமுகம் செய்து வாசிக்க தூண்டிய அனுபவமும் அனைவரும் கற்க வேண்டிய பாடம்!

எளியோர்க்கு உதவும் பெருமனம் கொண்ட ஆன்மன் எனும் எளிய மனிதர், கேரளா புயல் பாதிப்பின் போதும், தமிழக கஜாப் புயல் உருவாக்கிய விளைவுகளின் போதும் மேற்கண்ட பயணங்கள் அனைத்தும் கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டியவை!சமீபத்தில் விகடன் விருது பெற்ற தன்னம்பிக்கையின் சின்னமான இனியன் அவர்களின் குழந்தைகளைத் தேடிச் சென்று கொண்டிருக்கும் தொடர் பயணங்கள் நம்மை வேறு ஒரு தளத்திற்கு சென்று சிந்திக்க வைப்பவை!உலக வாழ்க்கை பயணம், நீ ஒப்புக் கொண்ட பயணம், அது முடியும் போது தொடங்கும், நீ தொடங்கும் போது முடியும்.... சிந்திக்க வைக்கும் சினிமா பாடல்!சாதாரணமாக நினைத்தால் நாம் தனி மனிதர்கள்தான்! ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரபஞ்சத்தின் ஒரு துளிதான் நாம்! இதை இன்னும் அழுத்தமாய் உணர்த்துவது வீட்டைத் தாண்டிய நம் பயணம் தான்!சுதந்திர சிறகு வெட்டப்பட்டு குடும்ப சிறையில் அகப்பட்ட மனித குலத்தின் சரிபாதி, தம் வீட்டின் வாசலைத் தாண்டி வைக்கும் ஒவ்வொரு அடியும் ஓர் புது உலக தரிசனத்திற்கான வாசல் திறப்பே!அடுத்த தலைமுறைகளின் இதமான அணைப்பை துணையாக்கி, இரு கால்களில் நாம் மேற்கொள்ளும் பயணங்களே, நம் அறிவை விசாலமாக்கி பண்புகளை பட்டை தீட்டி, மனிதம் மிளிரச் செய்து, வாழ்வை அழகானதாக மாற்றும்!எனவே கால்களை இறுக்கும் மாய விலங்கொடிபோம்! பயணங்களை ஆராதிப்போம்! அனுபவங்களை அள்ளிப் பருகுவோம்! சிறகசைப்போம்! ஆனந்தமாய் பறப்போம்! வாழ்வின் அர்த்தம் உணர்ந்து களிப்போம்!