புதுதில்லி:
இந்தியா முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ரேஷன் அட்டை இல்லா விட்டாலும் கூட சீராக ரேஷன் பொருட்கள் வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷனில் மளிகை பொருட்கள் கிடைக்க உத்தரவிட வேண்டும் என தர்பார் மகிளா சமன்வாய கமிட்டி என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ரேஷன் அட்டையோ, பிற அடையாள ஆவணமோ இல்லாவிட்டாலும் மளிகை பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய அளவிலான பாலியல் தொழிலாளர்களின் விவரங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்திருந்தாலும், எந்த திட்டத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குவது என்ற கேள்வி எழுகிறது என்று முறையிட்டார்.
மணிப்பூர் அரசு வழக்கறிஞர் முறையீடு
மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷனில் பொருட்களை வழங்க நிதி ஒதுக்குமாறு இந்திய உள்துறைக்கு கடிதம் எழுதியபோது, பேரிடர் நிவாரண நிதியை இந்த பணிக்காக வழங்க அனுமதியில்லை என்று பதில் வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.இதைக்கேட்ட நீதிபதிகள், இது ஒருகுறிப்பிட்ட மாநிலத்தின் பிரச்னை மட்டுமல்ல. வடகிழக்கில் உள்ள எல்லா மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் நிலவும் பிரச்சனை. இந்த மாநிலங்கள் அனைத்தும் நிதித்தேவைக்கு மத்திய அரசின் உதவியை நாடியே காத்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை நாடினால், அந்த அமைப்பு மத்திய அரசிடம் பேசி ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றுநீதிபதிகள் தெரிவித்தனர்.
பதிவு செய்ய அனுமதிக்க கோரிக்கை
முன்னதாக, மனுதாரர் சார்பில் கோவிட்-19 பெருந்தொற்றால் வருவாய் இழந்து தவிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ரொக்கம், மாதந்தோறும் ரேஷனில் மளிகை பொருட்கள், பள்ளி செல்லும் அவர்களின் பிள்ளைகளின் கல்வித்தேவைக்காக ரூ. 2,500, முகக் கவசம்,சோப்பு, மருந்துகள், கை சுத்திகரிப்பான்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர்களது மனுவில் கோரப்பட்டிருந்தது.மேலும், பாலியல் தொழிலாளர்களாக தங்களை பதிவு செய்ய அனுமதிக்க தொழிலாளர் நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலன்களை பதிவு பெற்ற பாலியல் தொழிலாளர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.