புதுதில்லி:
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள்நீதிபதிகள் அடங்கிய குடிமக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக விசாரணை செய்திடும்.
இக்குழு குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றபின்னர், வன்முறை வெறியாட்டங்களுக்கு முன்பும், பின்பும்மதவெறித் தீயை விசிறிவிட, பொய்ச் செய்திகள் மூலமாகப் பங்களிப்பினைச் செய்திட்ட ஊடகங்கள் குறித்தும், அரசு எந்திரம் இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்திடும்.2020 பிப்ரவரியில் நடைபெற்ற தில்லிக் கலவரங்கள் மீதான இக்குடிமக்கள் குழுவில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் மதன் லோகூர், முன்னாள் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.பி.ஷா, நீதியரசர் ஆர்.எஸ். சோதி, தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் அஞ்சனா பிரகாஷ், பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.கே.பிள்ளை, மத்திய உள்துறை முன்னாள் அமைச்சரும், மத்திய அரசின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பீரோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரலாகவும் இருந்த மீரான் சத்தா பொர்வாங்கர் முதலானவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.இக்குழு மூன்று மாதங்களுக்குள் தன் அறிக்கையைத் தாக்கல் செய்திடும்.
தலைநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் தொடர்பாக பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று புகழ்பெற்ற அரசமைப்புச்சட்ட முன்னாள் அரசு அதிகாரிகள் குழுக் கேட்டுக்கொண்டதால், இக்குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக, 2020 பிப்ரவரியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களின் மிகக்கொடூரமான தன்மையைப் பரிசீலனை செய்தும், இதன்மீது தில்லிக் காவல்துறை நடத்தியுள்ள புலன்விசாரணை பல்வேறு தரப்பினராலும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளதாலும், இதுபோன்று ஒரு விசாரணை தேவைப்படுவதாக அக்குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)