அடுத்த 30 வருடங்களை இந்தியாவில் முக்கிய 30 நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வாட்டர் ரிஸ்க் பில்டர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. ஏற்கனவே, சென்னை முதல் சிம்லா வரை தண்ணீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது. அந்த நேரங்களில் வாட்டர் ரிஸ்க் பில்டர் அமைப்பு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,
2050 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 100 நகரங்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கலாம். இதனால் 350 மில்லியன் மக்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. சீனாவில் அதிகபட்சமாக 50 நகரங்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 நகரங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன. மிக அதிகமாக பாதிக்கப்படப் போகும் நகரம் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர். இரண்டாவது இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் உள்ளது. அதே மாநிலத்தின் தானே நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது தவிர இந்த 30 நகரங்களின் பட்டியலில், பெங்களூர், விசாகப்பட்டினம், கோழிக்கோடு, கொல்கத்தா, மும்பை, புனே, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், டெல்லி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. சென்னையை பட்டியலில் குறிப்பிடவில்லை. உலக அளவில் சீன தலைநகர் பீஜிங் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க், துருக்கி நாட்டின் இஸ்தான்புல், ஹாங்காங், மெக்கா மற்றும் ரியோடி ஜெனிரோ நகரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. மொத்த நகரங்களில் 50 விழுக்காடு சீன நாட்டைச் சேர்ந்தது. உலக அளவில் எந்தெந்த நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதோ, அந்தந்த நகரங்களில் இப்போது 17 சதவிகிதமாக இருக்கும் மக்கள் தொகை 2050ஆ ம் ஆண்டுக்குள் 51 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது .
இந்தியாவின் வருங்காலம் நகரங்களை நம்பியிருக்கிறது. இந்தியா வேகமாக நகர்மயமாகி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, நிலத்தை பிளாட் போடுதல் போன்றவை முக்கியமானவை. மேலும், இந்தியாவில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முக்கியமானதாகும். மக்கள் அனைவரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் கவனம் செலுத்துவதின் மூலம் வருங்கால குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க முடியும் என அறிக்கை கூறியுள்ளது.