புதுதில்லி:
‘தன் சொந்த தேவைக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விராட்டை டாக்ஸி போலப் பயன்படுத்தியுள்ளார். அதில், அவரின் குடும்பம் மற்றும் சோனியா காந்தியின் பெற்றோர்கள் எனப் பலரும் சுற்றுலா சென்றனர். இதன் மூலம் ராஜீவ் காந்தி பெரும் ஊழல் செய்துள்ளார்’ என்று பிரதமர் மோடி அண்மையில் புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலளித்து வரும் நிலையில், 1987-ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வில் உண்மையிலேயே நடந்தது என்ன? என்று முன்னாள் கடற்படை அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளனர். வழக்கம்போல, மோடியின் விராட் கப்பல் பேச்சிலும் உண்மை இல்லை என்பதை அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
“ராஜீவ் காந்தி, இந்தியப் போர்க் கப்பலை குடும்ப சுற்றுலாவுக்காகப் பயன்படுத்தவில்லை. லட்சத்தீவில் உள்ள, தீவு மேம்பாட்டு ஆணையர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவே, விராட் கப்பலை ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். அப்போது, அவருடன் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி மற்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் வந்திருந்தனர். பிரதமர் மோடி சொன்னதுபோல, நடிகர் அமிதாப் பச்சனோ அல்லது சோனியாவின் குடும்பத்தினரோ அதில் பயணிக்கவில்லை” என்று ஐஎன்எஸ் விராட் கப்பலின் முன்னாள் துணை அட்மிரல் வினோத் பஸ்ரிசா தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இந்தியப் பாதுகாப்பு படையை, பிரதமர் மோடி, இவ்வாறு அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் பஸ்ரிசா கண்டித்துள்ளார்.இதையே, விராட் கப்பலின் முன்னாள் தலைமைக் கமாண்டராக இருந்த எல். ராமதாஸூம் தெரிவித்துள்ளார்.
“ராஜீவ் காந்தி குடும்பத்துக்காக எந்த ஒரு தனி கப்பலும் பயன்படுத்தப்படவில்லை. எங்களுடன் ஒரு சிறிய ஹெலிகாப்டர் மட்டுமே இருந்தது. அதுவும் அப்போதைய பிரதமருக்கோ அல்லது அவரின் மனைவிக்கோ உடல் நிலை சரியில்லாமல் போனால், அவசர உதவிக்குப் பயன்படுத்தவே உடன் இருந்தது. ராஜீவ் காந்தி, அரசு வேலைக்காகத் தன் மனைவியுடன் சில இடங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்றார். விராட் கப்பலிலோ அல்லது லட்சத்தீவுகளிலொ எந்த விருந்தும் நடக்கவில்லை” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.