tamilnadu

img

தில்லி சட்டமன்ற வெற்றிக்கு இப்போதே தயாராவோம்...

புதுதில்லி:
தில்லி மக்களவைத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 7 தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இங்கு பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில், காங்கிரசை விடவும் குறைவான வாக்குகளையே ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி தொண்டர்கள் கூட்டத்தில் பேசியிருக்கும், அக்கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “தோல்வியைப் பற்றியே எண்ணிக்கொண்டு இருக்காமல், 2020-இல் வரவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இப்போதே தயாராவோம்” என்று கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘அரசியல் மற்றும் பொதுவாழ்வுக்கு வந்தால், தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும்; அதற்கான திறன் வேண்டும்’ என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே முன்பே தன்னிடம் கூறியிருப்பதாகவும், அந்த வகையில் மக்களவைத் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் அதன் மிகப்பெரிய பலமான நேர்மை மற்றும் கடின உழைப்பை விட்டுக்கொடுக்காது என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.