அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி உடையார்கோயில் விவசாயிகள் சங்க கிளை கூட்டம் கிளைச் செயலாளர் எஸ்.பழனி தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கரு.ராமநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மணமேல்குடி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கவேலு, செல்லத்துரை, மணமேல்குடி கிளைச் செயலாளர் எஸ்.சேகர் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உடையார்கோயில் சுந்தர்ராஜபுரம் செல்லும் குடியிருப்பு சாலை சேதமடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் நடந்து செல்லக் கூட முடியாமல் சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைநீர் தேங்கி பள்ளமாக இருக்கும் இச்சாலையில் பாலம் அமைத்து தர வேண்டும். பயிர்க் காப்பீடு பதிவு செய்ய இந்த ஆண்டு வருவாய்த் துறை கணக்கு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வேளாண் வங்கியில் காப்பீடு செலுத்த மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்ற உத்தரவால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதனால் டிச 26-ஆம் தேதி வரை காப்பீடு செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.