நாமக்கல், மே 7-ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாகக் கைதான அமுதவள்ளி உள்ளிட்ட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் கொல்லிமலையில் சட்ட விரோதமாகக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ராசிபுரத்தை அடுத்த தட்டான் குட்டை, காட்டூரைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்க உதவியாளர் ரவிச்சந்திரன் (55), இவரது மனைவி அமுத வள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத் தரகர்கள் பர்வீன், அருள்சாமி, ஹசீனா, லீலா, பவானி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் 15 குழந்தைகள் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. (சென்னை) டி.எஸ்.பி. ராஜா சீனிவாசன் மேற்பார்வையில் டி.எஸ்.பி. கிருஷ்ணன் (சேலம்) தலைமையிலான காவலர்கள் வழக்கு ஆவணங்களைப் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சித பிரியாவிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.பின்னர் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் சுஜாதா, கற்பகம், மணிகண்டன், சாரதி, கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடந்தது. கொல்லிமலை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.குழந்தை விற்பனை கும்பல் தலைவி அமுத வள்ளி உள்பட 8 பேரையும் தனித்தனியாக 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காகச் செவ்வாயன்று(மே 7) நாமக்கல் நீதிமன்றத்தில் டி.எஸ்.பி. கிருஷ்ணன், ஆய்வாளர் பிருந்தா ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் குழந்தை விற் பனை தொடர்பாகக் கைதான அமுத வள்ளி உள்ளிட்ட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.