நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நாகர்கோவில் வடசேரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சரியாக திட்டமிடப்படாமல் கடந்த8 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல் அம்ருத் குடிநீர்திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் சாலைகள் பாதாள கிணறுகள் போன்று குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக, தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயணிக்கும் வடசேரி வெட்டூர்ணிமடம் சாலையில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் காணப்படும் குண்டு குழிகளாலும், தூசு படலத்தாலும் அப்பகுதி வழியாகசெல்லும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துகளும் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரிமாவட்டம் வருவதாக அறிவிக்கப் பட்டது. அதையொட்டி சில இடங்களில்மட்டும் அவசர கதியில் தரமற்ற முறையில் சாலைகள் செப்பனிடப்பட்டன. அந்த சாலைகளிலும் சில நாட்களில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து முன்னர் இருந்தது போலவே குண்டும் குழிகளாக மாறியுள்ளன. இந்நிலையில் நாகர்கோவில் மாநகர் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தி நாற்று நடப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், மாநகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக சாலையை தற்காலிக பழுதுபார்ப்பதுடன், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டு தினங்களுக்குள் சாலையை முழுமையாக செப்பனிடாவிட்டால் மீண்டும் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என கூறி கலைந்து சென்றனர். நாற்று நடும் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு உறுப்பினர் அஸீஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, காஜா, முருகேசன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.