தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்கள் ஆன ஆண் குழந்தை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலை அருகே இன்று அதிகாலையில் பாதி எறிந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்துள்ளது. இது குறித்து சங்கரன் கோவில் நகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். பாதியளவு எரிந்து கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அதன் அருகே ரத்தக் கரை படிந்த துணிகளும் இரண்டு புதிய துணிகளும் எரிந்த நிலையில் கிடைத்துள்ளன. இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் சங்கரன்கோவில் சங்குபுரம் 6 ஆவது பகுதியை சேர்ந்த கோமதி (21), கோமதியின் தாயார் இந்திராணி, மற்றும் அவரது தந்தை சண்முகவேல் ஆகியோரிடம் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.