tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து   வீடுகளில் கறுப்புக் கொடி

 மன்னார்குடி: கொரோனா நோய் தொற்று தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசும் பொது மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் மக்கள், பொது இடங்களில் கூடுவதை மார்ச் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தனது சமூக கடமையை நிறைவேற்றும் நாட்டுப்பற்று பொறுப்பின் காரணமாக பிப்.15 முதல் முத்துப்பேட்டையில் நடைபெற்று வந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தை மார்ச் 18 முதல் 31 வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அறிவித்துள்ளது.  செவ்வாயன்று நடைபெற்ற இதற்கான கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி தலைமை வகித்தார்.  குடியுரிமையில் மதத்தை புகுத்தும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும்  விதத்தில் வீடுகளில் கருப்பு கொடி கட்ட வேண்டும் என பொதுமக்களுக்கு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. வீடுகளில் கறுப்புக்கொடி கட்டும் பணியை முத்துப்பேட்டை ஷாகின்பாக் தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.