tamilnadu

திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

தாய், மனைவியுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை,செப்.16- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கு மேல்பென்னாத்தூர் கிராமத்தில் சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதே ஊரைச் சேர்ந்த சிலர், அந்த நிலத்தில் 50 சென்ட் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பாய்ச்சல் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்து வந்துள்ளார்.  ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த அவர், மனைவி நவநீதம், தாய் சுந்தரி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முறைப்படி சலான் கட்டிய அளந்து காணிக்கல் நடப்பட்ட நிலத்தை எதிரிகள் வந்து மிரட்டி காணிக்கல்லை பிடுங்கி எறிந்துவிட்டு எங்களை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார்.

கல்லால் தாக்கி வாலிபர் கொலை
திருவண்ணாமலை, செப்.16- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவர் புதுச்சேரியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பானுபிரியா (32). இவர்களுக்கு சஞ்சய்(8) என்ற மகனும், தர்ஷினி(6) என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கடந்த 1 மாதமாக தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரிக்கு வேலைக்கு சென்ற வெங்கடேசன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். திங்களன்று(செப்.16) அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் தண்டராம்பட்டு காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வெங்கடேசன் தலையில் காயம் இருந்தது. மர்ம ஆசாமிகள், கல்லால் தாக்கி வெங்கடேசனை கொலை செய்தது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.