tamilnadu

அருந்ததிய பெண் அடித்துக் கொலை: 5 பேர் கைது

திருவண்ணாமலை,பிப்.16- திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மன்சுராபாத், காட்டு தெல்லூர் கிராமத்தைச் சோ்ந்தவர் வெங்கடேசன். அருந்ததிய வகுப்பை சேர்ந்த இவா் தனது நிலத்துக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த நிலத்திற்கு அருகே உள்ள 4 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில், அதே கிராமத்தில் வசிக்கும் வன்னியர் வகுப்பை சேர்ந்த முத்து, தனபால், தனசேகர், தேவராஜ் என்பவர்கள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலங்களின் எல்லை தொடர்பாக, வெங்கடேசனுக்கும், அந்த 4 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் தரப்பைச் சோ்ந்த 5 பேர் சோ்ந்து உருட்டுக்கட்டையால் வெங்கடேசனை தாக்கியுள்ள னர். இதை தடுக்க வந்த அவரது மனைவி சசிகலா (30)  என்பவரும் தாக்கப்பட்டாராம். இதில் பலத்த காயமடைந்த சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் காவல் துறையினர் சசிகலா சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டுள்ள அருந்ததிய பெண் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.செல்வன்  வலியுறுத்தியுள்ளார்.