திருமுருகன் பூண்டி விவேகானந்த சேவாலயத்தில் சிறுவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான காப்பக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
விவேகானந்த சேவாலயத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் மூவர் உயிரிழந்ததுடன், 12 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பிரச்சனையில் குழந்தைகள் பாதுகாப்பை கவனிக்கத் தவறி அலட்சியமாக செயல்பட்ட சேவாலய நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளியன்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. அத்துடன் விசிக, திக உள்ளிட்ட அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
வெள்ளியன்று பிற்பகல் பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் திரண்டிருந்தனர். அங்கு வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என தெரிவித்தனர்.
எனினும் மார்க்சிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். பூண்டி கட்சி அலுவலகத்தில் இருந்து, விவேகானந்த சேவாலயம் சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான நிர்வாகிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பியவாறு அவிநாசி திருப்பூர் சாலையில் அணிவகுத்துச் சென்றனர். சேவாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நிலையில், பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே காவல் துறையினர் இவர்களைத் தடுத்து கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.வெங்கடாசலம், ஆர்.பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர்கள் ராசு, காமராஜ் மற்றும் பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி மற்றும் மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா, மாவட்டப் பொருளாளர் ஆர்.கவிதா, மாநிலக்குழு உறுப்பினர் சி.பானுமதி, மாவட்ட நிர்வாகி ஷகிலா உள்பட சுமார் 50 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அதேபோல் சிபிஎம், திக., விசிக., உள்ளிட்ட அமைப்பினரும் சம்பவ இடத்துக்கு வந்தபோது காவல் துறையினர் முன்கூட்டியே அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.