திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு சாலை அமைக்கும் கோரிக்கையை, மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக் கொண்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தில், வன உரிமைச் சட்டம் 2006 அடிப்படையில் திருமூர்த்தி மலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை பாதை அமைக்க அனுமதி வழங்கக் கோரி கடந்த 3 நாட்களாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தை மலைவாழ் மக்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்திற்கு, பல்வேறு சங்கங்களின் தொடர் ஆதரவு பெருகி வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் அரசுத் தரப்பில் மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர், உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் தளி பேரூராட்சி தனி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் போராட்டக்காரர்கள் சார்பாகப் பேசிய பெ.சண்முகம், வன உரிமைச் சட்டம் 2006இன் படி குருமலை செட்டில்மெண்ட் செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும். இதில் வேறு சலுகை கேட்கவில்லை, சட்டப்படி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், உள்கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான அமைக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. மலைவாழ் மக்கள் சங்கம் நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டத்திற்கு இதன் மூலம் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.