tamilnadu

திருநெல்வேலி ,தேனி முக்கிய செய்திகள்

ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாக  வெளியே விழுந்த சிறுமி
திருநெல்வேலி, அக். 10- நெல்லை அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே விழுந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.  பாளையங்கோட்டை சமாதானபுரம் பழைய மிலிட்டரி லைன் பேரின்ப தெருவை சேர்ந்தவர் பேட்ரிசன். இவருடைய மகள் ஸ்மைலின் (வயது 6). 2 நாட்களுக்கு. முன் இரவு பேட்ரிசனின் மனைவி சுதா, குழந்தை ஸ்மைலின் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துகொண்டிருந்தனர். ரெயில் வள்ளியூரை கடந்து செங்குளம் பகுதியில் வந்தபோது சிறுமி ஸ்மைலின் அவசர வழி ஜன்னல் (இதில் தடுப்பு கம்பிகள் இருக்காது) அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்து விழுந்தாள். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ரெயில் பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து பிடித்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் சிறுமி விழுந்த பகுதிக்கு வேகமாக ஓடிச்சென்றனர். அப்போது ஸ்மைலின் கையில் காயங்களுடன் அழுது கொண்டிருந்தாள். வள்ளியூரில் இருந்து புறப்பட்ட ரெயில் மெதுவாக இயக்கப்பட்டதால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். பின்னர் பெற்றோர் அவளை வாரி அணைத்து அதே ரெயிலில் நெல்லை சந்திப்புக்கு வந்து சேர்ந்தனர். அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் ஸ்மைலின் கையில் இருந்த காயத்துக்கு கட்டுபோட்டு சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்மைலின் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தன மரம்  வெட்டிக்கடத்தல்
தேனி, அக்.9- மயிலாடும்பாறையில் தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் இருந்த 2 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி சென்றது குறித்து காவல்துறையினர் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே வைகை அணை பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த ஆலைக்கு சொந்தமான சொகுசு பங்களா மயிலாடும்பாறை பகுதியில் அமைந்துள்ளது.இதில் சேலம் மாவட்டம் தாரமங்களத்தைச் சேர்ந்த பூபதிராஜா (36) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இந்த பங்களா முன்பு 7 ஆண்டுகள் வளர்ந்த 2 சந்தன மரங்கள் இருந்து வந்துள்ளது.அந்த மரங்களை செவ்வாய்க்கிழமை இரவு மர்மநபர்கள் வெட்டி சென்றதாக மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் பூபதிராஜா புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.