தஞ்சாவூர், ஜூன்.10- தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்துக்காக வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவது என ஒத்தக் கருத்துடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் கீழ வீதியில் ஒத்தக் கருத்துடைய அனைத்துக் கட்சிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ.பாரதி தலைமை வகித்தார். இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மு.அ.பாரதி தெரிவித்ததாவது: பொலிவுறு நகரம்(ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. முறைகேடு செய்கிற நோக்கில் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தில் ஏற்கெனவே ஒரு பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்து, 5,000 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி நடைபெறுகிறது. இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆட்சியரை ஜூன் 11 சந்தித்து எதிர்ப்பைப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது, என்ன திட்டம்? யாருக்கான திட்டம் என்பதற்கான வெளிப்படைத்தன்மை இல்லை. ஏற்கெனவே உள்ள குடியிருப்பு வீடுகள், வணிக கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதன் மூலம் வணிகர்கள், மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இத்திட்டத்தில் மக்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், அரசுப் பணமும் விரையமாக்கப்படுகிறது. எனவே, மக்களையும், அரசுப் பணத்தையும் காப்பாற்ற நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், பிரதிநிதிகள் இல்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர்களது முடிவின் அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார் மு.அ.பாரதி. கூட்டத்தில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன்(திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம்(தஞ்சாவூர்), மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலர் என்.குருசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலர் ச.சொக்கா ரவி, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி.சந்திரகுமார், வணிகர் சங்கங்களின் பேரவை மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.