tamilnadu

பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

தேரோட்டத்திற்கு அனுமதி கோரி போராட்டம்

பெரம்பலூர், ஜூன் 16- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராம கோயில் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு விழா நடந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் கிராமத்தில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு காரணமாக வருவாய்த்துறை சார்பில் தேரோட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோவில் முன்பு சூடம் ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

ஜாக்டோ- ஜியோவினர் மீதான வழக்குகளை ரத்து செய்து பதவி உயர்வு வழங்க கோரிக்கை 

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். புரவலர் அப்பாசாமி, சிறப்பு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் ஜான்உபால்ட் நன்றி கூறினார். கூட்டத்தில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதுள்ள 17 பி மற்றும் காவல்துறையில் புனையப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை ரத்து செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.