கும்பகோணம், ஜூன் 23- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு கூட்டம் திருவிடைமருதூர் தோழர் பி.ஆர். நினைவகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் சங்க திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.சங்கர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி டெல்டா பகுதியான திருவிடைமருதூர் பகுதியில் விவசாயிகளுக்கும் விவசாய நிலத்தையும் பாழாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 2019 ஆகஸ்ட் மாத இறுதியில் திருவிடைமருதூரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், அதற்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூன் 29 வேப்பத்தூரிலும், ஜூலை 7 ஆடுதுறையிலும், ஜூலை 18 திருபுவனத்திலும் சிறப்பு பேரவை மற்றும் பிரச்சாரம் நடைபெறும். அதேபோல திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருபுவனம் குட்டிமாசாவடி, கட்டுமாங்குட்டை, ஊரக்குட்டை உள்ளிட்ட திருவிடைமருதூர், வேப்பத்தூர் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரப்படாமல் உள்ளன. தண்ணீர் வந்தாலும் சேமிக்க முடியாமல், குடிநீருக்கு அபாயம் உள்ளது. உடனடியாக அனைத்துக் குளங்களும் தூர்வாரப்பட வேண்டும். திருவிடைமருதூர் பாசன வசதிக்கு பிரதான வாய்க்கால்களான சந்தன வாய்க்கால், வேப்பத்தூர் மோட்டார் வாய்க்கால் போன்ற கிளை வாய்க்கால்களும் உடனடியாக தூர்வாரப்பட வேண்டும். தற்போது ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மேற்படி வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை வேண்டும் என திருவிடைமருதூர் ஒன்றிய விவசாய சங்க ஒன்றிய குழு கேட்டுக் கொள்கிறது.