தம்மைத் தோண்டுவோர் தன்னை விழாமல்
தாங்கிடும் நிலமாய் வாழ்ந்திடு!- பிறர்
வெம்மை இகழ்மொழி தன்னைப் பொறுத்திடு
வெற்றியால் மண்ணில் ஆழ்ந்திடு!
பிறர்செய் தீமை பொறுத்தல் நல்லது
பின்னும் அதைநீ மறந்திடு!- வறுமை
விருந்தினர் போற்றா திருத்தல், வலிமை
வன்மொழி பொறுத்தல் உரைத்திடு!
பொறுமை உரைவிடம் நீயாய் இருந்திடு
போற்றும் உலகம் மனிதனாய்!- அவர்
சிறுமைச் செயல்களைப் பொறுத்திடு உன்னை
சிறப்புடன் போற்றுவர் பொன்னாய்!
கேட்டினை மறந்தால் வாழ்நாள் முழுதும்
கேடில்லா இன்பம் சுரக்கும்! –அவர்
கேட்டினை மறக்கா தீமை புரிந்திடின்
கேடுடை இன்பம் பிறக்கும்!
கேடுக்கு கேடு செய்திடின் இன்பம்
கிடைத்திடும் ஒருநாள் மட்டும்!-அவர்
கேட்டினை மறந்தால் வாழ்நாள் முழுதும்
கிடைத்திடும் புகழ்திக் கெட்டும்!
பழிக்குப் பழியெனப் பிறர்க்குச் செய்யாப்
பண்பினை நாளும் உயர்த்து!-நீ
அழியும் ஆணவக் குணத்தினர் தம்மை
ஆற்றல் பொறுமையால் அயர்த்து!
எல்லை கடந்த துன்பம் செய்தவர்
எரிசொல் அதனைப் பொறுத்திடு!-என்றும்
நல்ல துறவியாய் நானிலம் போற்றும்
நாளும் அதனைக் காத்திடு!
உண்ணா திருந்து நோன்பினை நோற்பவர்
உலகில் பொறுமைப் பின்னே!-அவர்
கண்ணாய்ப் போற்றும் பொறுமை போற்றுக
காட்சியில் நீதான் முன்னே!