tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டியா? ஸ்வாகா சிட்டியா?

ஸ்மார்ட் சிட்டி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தொடங்கி  வைத்தார். இதில் மெட்ரோபாலிட்டன் என்று சொல்லப்படுகின்ற 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக் கூடிய நகரங்களை தேர்ந்தெடுத்து உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது என்று மத்திய அரசு ஜூன் 2015 ஆம் ஆண்டு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து 12 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கிட திட்டமிட்டது. இதன் திட்ட காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமலாக்க மத்திய அரசும், மாநில அரசும் ஒவ்வொரு நகரத்திற்கும் தலா 500 கோடி என ஒரு நகரத்திற்கு 1000 கோடி நிதியுதவி அளிக்க திட்டம் வகை செய்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலாவதாக (2015- 2016) சென்னை, கோயமுத்தூர். இரண்டாவது சுற்றில் (2016-2017) மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர். மூன்றாம்  சுற்றில் (2017-2018) திருச்சிராப்பள்ளி, திருப்பூர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி. நான்காம் சுற்றில் ஈரோடு, திண்டுக்கல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம் 
மாநகரின் உள்கட்டமைப்புகளை சிறப்பானதாக உருவாக்கி வெளிநாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்களின் தொழில்களை ஈர்த்து நகரப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இத்திட்டம் என சொல்லப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் உலக வங்கி , ஆசிய வளர்ச்சி வங்கி , ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை , ஐக்கிய நாடுகளின் தொழில்  வளர்ச்சி அமைப்பு போன்ற பன்னாட்டு வங்கி அமைப்பு களிடமிருந்து கடன் வாங்கியும் மக்கள் வரி பணத்தை கொண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு உலக வங்கிகளும் மூலம் கடன்களை கொடுத்து பல்வேறு விதிகளை உருவாக்கி ஏழைகள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் பயனடையும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது, பேருந்து ரயில் கட்டணத்தை உயர்த்த சொல்வது, மானியங்களை முற்றாக கைவிட நிர்ப்பந்திப்பது, ரேசன் கடைகளை மூட வலியுறுத்துவது, ஏழைகளுக்கான நலத்திட்டங் களை நிறுத்த சொல்வதும் முற்றாக சேவை என்ற பதத்தையே கட்டணம் செலுத்தினால் மட்டுமே சேவை  என்ற நிலையை உருவாக்குவது மற்றும் விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளுக்கு தடை விதிக்க செய்து போராட்டங்களை தடுப்பது என்பது போன்ற நிர்ப்பந்தங்களை இந்த அமைப்புகளிடம் கடன் வாங்கும்  வளரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளுக்கு மேற்கண்ட கட்டுப்பாடுகளை அமலாக்க நிர்ப்பந்திக்கின்றது. உலக வர்த்தக மையத்தின் கட்டுப்பாடு களை அமலாக்கவே இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம். உள்நாட்டு, வெளிநாட்டு, பெரும் நிறுவனங்களும், ஆளும் கட்சியினரின் பினாமிகள், உயர் மற்றும் உச்சநீதிமன்ற சட்ட சேவை நிறுவனங்களும் லாபகரமாக தொழில் நடத்தி ஒப்பந்த முறையில் இந்திய நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படையான சேவை எனும் பெயரில்  மக்களிடமே மொத்தமாகவும் சிறுகச் சிறுக இருக்கும் பணத்தை செலுத்தச் சொல்லி இனி சேவை என்பது கட்டணமே என மெல்ல திணிக்கும் திட்டமே ஸ்மார்ட் சிட்டி திட்டம்.
கருத்துக் கேட்பு எனும் ஏமாற்று வேலை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்த சேவை வேண்டும் என திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்க மக்களும் ஆலோசனை வழங்கலாம் என கண்துடைப்புக்கு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி ஆலோசனை பெறப்படுவதாக சொல்லிக் கொள்ளும் அரசு நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பே மாநில அரசு அதிகாரிகளும் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க மக்களின் அனுமதி இன்றி ஓர் தனியார் ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்து விடுவார்கள். மக்கள் அளித்த ஆலோசனைகளைக் கணக்கில் கொள்ளாமல் திட்ட அறிக்கையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய வருவாய் பெற வழிவகை செய்யப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும்  தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் தொடங்கும் சேவைகள் மக்களுக்கு வழங்குவதாக காட்டி ஆரம்பத்தில் இலவசமாக அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் நாளடைவில் அடிப்படையான தேவைகளை கூட பெயர் மாற்றம் செய்து கட்டணம் செலுத்தியே பெற முடியும் என்ற  நிலைக்கு மாறும் சூழல்களே அதிகம். குறிப்பாக குடிநீர், மின்சார சேவையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெறும். சேவைக்கான விலையை உயர்த்திக் கொள்ள ஒப்பந்தத்தில் எவ்வித தடையும் இருக்காது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதற்கான ஒப்பந்தத்தை மக்கள் தீர்மானிக்க முடியாதாம். மக்களிடம் ஒப்பந்தமும் காண்பிக்கப்படாதாம். ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்த வரைவை தனியார் ஆலோசகர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் தீர்மானிப்பார்கள்.  மத்திய அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிட்டி வழிகாட்டுதலை மக்களால் தீர்மானிக்க முடியாது. முறைகேடுகளை தடுக்கவும் முடியாது. மக்களால் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி மன்றங்களும் எவ்வித தலையீடும் செய்ய முடியாதாம். இவற்றில் ஏற்படும் ஏதேனும் பாதிப்புகள் குறித்து நீதிமன்றங்களை மட்டுமே நாட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் திருச்சி இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சியே. மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி நகரில் ஐந்தாண்டுகளில் ரூபாய் 1000 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது. ஆண்டுக்கு 200 கோடி செலவிடப்படுமாம். இதன் மூலம் மலைக்கோட்டையை மையமாக வைத்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் வெளிநாடுகளுக்கு நிகரான நடைபாதையுடன் கூடிய பளிச்சிடும் சாலைகளும் மின்விளக்கு வசதிகளும் செய்யப்படுமாம். 24 மணி நேர குடிநீர் வசதியாம். சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனமாக மேம்படுத்தி மூன்றடுக்கு வாகன நிறுத்தும் மையம், தெப்பகுளம் பகுதியில் பூங்கா அமைத்து வண்ண ஒளியுடன் நீரூற்றுகள், தில்லை நகரில் ரூபாய் 15 கோடியில் வணிக வளாகம், உய்யக் கொண்டான் வாய்க்கால் அழகுபடுத்த 50 கோடி ஒதுக்கீடு அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை உரமாக மாற்றி அதே இடத்தில் பூங்கா, திருச்சி காந்தி மார்க்கெட்டில் 3000 கடைகளுடன் பல அடுக்குமாடி வணிக  வளாகம், மல்டி லெவல் கார் பார்க்கிங், ரூபாய் 20.28 கோடி மதிப்பீட்டில் 142 கார்கள் உள்பட 678 வாகனங்கள் நிறுத்த 4 மாடி கட்டிடம், அம்மா மண்டபம் நவீனப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் திருச்சி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளதாம். இவற்றிற்குள் நுழைவதற்கும், நடப்பதற்கும் கட்டணம் வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பயனில்லா ஸ்மார்ட் சிட்டி திட்டம் 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முக்கிய நோக்கமாக மாநகர பகுதியில் 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்து முன்மாதிரி நகரை உருவாக்குவது தான் இத்திட்டத்தின் முதல் நோக்கம். ஆனால் இதனை செயல்படுத்திட எவ்வித முயற்சியும் இங்கு இல்லை. அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் முறையான திடக்கழிவு மேலாண்மை செய்யாது தேங்கிக் கிடக்கும் குப்பைகளை ஆண்டுக்காண்டு எரிமலை யாய் வெடித்து கொண்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு எதுவும் இல்லை. தமிழகத்தின் மையமாக உள்ள திருச்சியில் அனைத்து பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருபது ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்க செயல் திட்டமும் இதில் எதுவும் இல்லை. உய்யக்கொண்டான் வாய்க்கால் பாழாய்ப் போனதற்கு முக்கியக் காரணம் மாநகராட்சியின் கழிவு நீரை நேரடியாக வாய்க்காலில் கலப்பதும், திருச்சி அரசு மருத்துவமனையின் ஒட்டுமொத்த கழிவுகளையும் நேரடியாக உய்யக்கொண்டானில் விடுவதும், மேலும் திருச்சி மாநகரின் பல பகுதிகளுக்கு பாதாளச் சாக்கடை திட்டம் முழுமை பெறாமல் அந்தப் பகுதி கழிவுநீர் ஆயிரம் ஆண்டு பழமையான உய்யக் கொண்டானிலேயே சங்கமமாகி திருச்சியின் கூவமாக மாறியதை முறைப்படுத்த திட்டத்தில் ஏதுமில்லை.
ஸ்மார்ட் சிட்டியும் அடித்தட்டு மக்களும் 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை காரணம் காட்டி மாநகரில் வாழும் ஏழை எளிய உழைப்பாளி மக்களையும், தெருவோரம் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளையும் விரட்டியடிப்பது முதன்மை நோக்கமாகவே உள்ளது. மாநகரில் வாழும் மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகரிக்க பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய செய்திட தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிடுவதாக இந்தத் திட்டம் இல்லை. மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி மக்களுக்கு நிறைவான சேவை வழங்கிட திட்டத்தில் எதுவும் இல்லை. திருச்சி மாநகர் ஒரு மணிநேர மழைக்கே சாக்கடைகள் நிரம்பி சாலையில் ஓடும் அவலம் தொடர்கிறது. மக்கள் குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி  குடிநீர் வசதி ,தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இன்னும் முழுமை பெறாத நகரமாகவே உள்ளது. இதனை மேம்படுத்திட இத்திட்டத்தில் எதுவும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி என பூங்காக்கள், வண்ண செயற்கை நீரூற்றுகள், நடை பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நவீன வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் என்பதே இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லாமல் அது வெற்று அலங்காரங்கள், விளம்பரங்களாகவே உள்ளன.
வசூல் வேட்டை ஆரம்பம் 
ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே சாலை ஓரங்களில் மஞ்சள் நிற கோடு வரையப்பட்டு வாகனம்  நிறுத்துவதற்கான எவ்வித வசதியும் இல்லாத சூழலில் எச்செலவும் செய்யாது கட்டணம் வசூலிக்க மட்டும் டெண்டர் விடப்பட்டு இருசக்கர வாகனத்திற்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு மணிக்கு 20 ரூபாயும் வசூல் நடத்திடும் அடாவடி தொடர்கிறது. ஆனால் வணிக வளாகங்கள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் இல்லாத கட்டிடத்திற்கு எவ்வித அபராதமும் கிடையாது. பார்க்கிங் இல்லாத கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்த மாநகராட்சி மீதும் எவ்வித நடவடிக்கையும் கிடையாது. ஆனால் அப்பாவி மக்களுக்கு மட்டும் அபராதமாம். இதுபோல மாநகரில் உள்ள சாலையோரங்களில் நிறுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் முழுமையாக வசூலிக்கப்படும் என திட்டவட்டமாக கூறுகிறது. இத்திட்டத்திற்கு பெயர் ஆன்சைட் பார்க்கிங் வசதியாம். இதற்காக டெண்டர் விடப்பட்டு அமைச்சர்களின் பினாமிகள் அடாவடி வசூல் ஆரம்பமாகியுள்ளது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக வீட்டிற்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங் களுக்கு இனி கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்பாடும் இத்திட்டத்தில் உள்ளதாம். மாநகராட்சியால் வழங்கப்படும் குடிநீருக்கு இனி மீட்டர் பொருத்தப்பட்டு நீர் பயன்பாட்டிற்கு ஏற்ப கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுமாம். குப்பைகளை கையாள ஏற்கனவே குப்பை வரி என தனியாக வசூலிக்கும் நிலையில் இனி மக்கா குப்பை மட்டும் மாநகராட்சி சார்பில் வாங்கப்படும் எனவும் மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டுமாம். அவ்வாறு செய்யாத வீடுகளுக்கு மாதம் ரூபாய் 50 ரூபாய் தனி அபராதமாக விதிக்கப்படும். வீடுகளி லிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரையும் அளவிட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என இப்படியாக படிப்படியாக மாநகராட்சி நிர்வாகம் சேவை என்பதை அனைத்தையும் கைவிட்டு முழுமையாக தனியாரிடம் தாரைவார்த்திடும் திட்டமே ஸ்மார்ட் சிட்டி திட்டம்.

கட்டுரையாளர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர், திருச்சி மாநகர் மாவட்டம்