tamilnadu

வெங்காய விலையேற்றம்: அப்பாவி விவசாயிகளின் வேதனைக் குமுறல்- வே.தூயவன்

வெங்காய விலை உயர்வு குறித்து விவசாய நிலங்களில் உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் தர்க்க நோக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் வெங்காய விலை உயர்வுக்கு யார் காரணம் என கேள்வியை எழுப்பி விவசாயியா? வியாபாரியா? பொது மக்களா? என ஒவ்வொரு தரப்பினர் நிலையில் இருந்தும் விலை உயர்வைப் பற்றி விவாதிக்கிறார்.  விலை உயர்வுக்கு விவசாயி காரணமல்ல என்று தனது கருத்தை சரியாகவே பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக இந்தியாவில் வெங்காய விவசாயம் நடக்கும் பகுதிகளில் ஒருபுறம் வறட்சி, மறுபுறம் வெள்ளம் காரணமாக சாகுபடி குறைந்துவிட்ட நிலையில் இந்த விலை உயர்வு  ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, விவசாய விளைபொருட்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டபோதெல்லாம், அதை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோராகிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்களே தவிர, விவசாயிகளைப் பற்றி கவலைப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் இந்த விலையேற்றத்துக்கு வியாபாரிகளும் ஒரு வகையில் காரணம், விவசாயிகளிடம் கிலோ ரூ.60க்கு வாங்கிக் கொண்டு, தட்டுப்பாட்டையும், விலையேற்றத்தையும் பயன்படுத்தி இரண்டு மடங்குக்கு மேல் விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். நவீன தொழில்நுட்பம், குளிர்பதனக் கிடங்குகளில் காய்கறிகளைச் சேமித்து வைத்து விலையை ஏற்றி விற்கிறார்கள் என்பதையும் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். கடைசியாக விலையேற்றத்துக்கு பொது மக்கள் காரணமா என்று கேள்வி எழுப்பி, விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத, அவர்களது துயரத்தை உணராத, விவசாயக் கடன் தள்ளுபடி கேட்டால் ஏளனப் பார்வையில் பார்க்கக்கூடிய, உழவர் சந்தைக்குப் போகாமல் சோம்பேறிகளாக, வியாபாரிகளை நாடும் பொது மக்கள்தான் விலையேற்றத்துக்குக் காரணம் என்று ஈசன் கூறுகிறார். உலகமயத்தில் வேளாண் சந்தைகளும், உலகச் சந்தையை ஒட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. தேவையும், அளிப்பும் மட்டுமே சந்தையைத் தீர்மானிக்கும்போது அந்த சந்தையை உலகமயம் கட்டுப்படுத்தும்போது இதுபோன்ற விலை ஏற்றங்கள் தவிர்க்க இயலாது என்று சொல்கிறார். இதற்குள்தான் விலையேற்றத்துக்கான சூட்சுமம் அடங்கியுள்ளது. தேவையும், அளிப்பும் மட்டுமே இயல்பாக சந்தையில் விலையைத் தீர்மானிப்பதாக இருந்தால் விலை ஏற்ற, இறக்கம் இயல்பானதாக இருக்கும். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், முன்பேர வர்த்தகச் சூதாட்ட கும்பல்களும்தான் உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தக் கூடியவையாக உள்ளன. ஆஸ்திரேலிய ஆப்பிளாக இருந்தாலும், நியூசிலாந்து கிவி பழமாக இருந்தாலும், இந்தியாவின் பருத்தியாக இருந்தாலும் உலகில் எந்த பகுதியாக இருந்தாலும் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நியாயமான, கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்பதே உண்மை.  வேண்டுமானால் இந்திய விவசாயியை விட, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து விவசாயி கொஞ்சம் கூடுதல் விலை பெறுபவராக இருப்பார். வளர்ந்த நாடுகளின் அரசுகளும் ஏழை நாடுகளின் விவசாயிகள் செத்தொழிந்தால் பரவாயில்லை என தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு கொஞ்சம் மானியம் கொடுக்கின்றன. எனினும், அவரது நாட்டிற்குள் மற்றவர்களுடன் ஒப்பிடும் நிலையில் விவசாயியின் நிலை இங்குள்ள இந்திய விவசாயியின் நிலைக்கு பெரியளவில் வேறுபட்டதாக இல்லை.  இத்தகைய சூழலில்தான் அந்தந்த நாடுகளை ஆளும்  அரசுகளுக்கு அவரவர் நாட்டு வேளாண்மையையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளது. குறிப்பாக 70 சதவிகிதமான மக்கள் வேளாண்மையைச் சார்ந்திருக்கும் இந்திய அரசுக்கு இதில் மிக, மிக கூடுதல் பொறுப்பு உள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் பொருட்கள்  தொடர்பாக சந்தையைத் திறந்துவிடும்போது, நம் சொந்த விவசாயி களைக் காப்பதற்கான நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும். உலகமய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்ட, கடந்த 1991ஆம் ஆண்டு  முதல் இப்போது 2019 வரை 28 ஆண்டு காலத்தில் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்கள் விவசாயிகளைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? தாராளமயம் என்ற பெயரில் கனரக தொழில்கள், இயற்கை கனிம வளங்கள், சுரங்கங்கள், கணினி்த் தொழில் என தொழில் உற்பத்தி, சேவைத் துறை, நிதித்துறை ஆகியவற்றை கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அகலத் திறந்துவிட்டனர் என்பது அனுபவ உண்மையல்லவா? அத்துடன் உணவு உற்பத்தியை மையப்படுத்திய வேளாண்மையை, வணிகப் பயிர் அடிப்படையிலான விவசாயமாக மாற்று வதை நோக்கித் தள்ளினார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? விவசாயத்துக்கான இடுபொருட்கள் மற்றும் உரம், பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றுக்குரிய மானியத்தை படிப்படியாக வெட்டிச் சுருக்கி இல்லாமல் செய்வது, விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமான நடவடிக்கையும் எடுக்காதது, அவர்களது முட்டுவழிச் செலவுகளுக்கான நிதியாதாரத்தை கந்துவட்டி கடன் கும்பலிடம் சிக்கும் நிலைக்குத் தள்ளியது என படிப்படியாக இந்திய விவசாயத்தைச் சீரழித்தது ஆட்சியாளர்கள் அல்லவா?  இடதுசாரிகள் ஆதரவுடன் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது விவசாயத்திற்கான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை கொடுத்தது. விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, மிகக் குறைந்த வட்டியில் விவசாயக் கடன் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை விவசாயத்தை புத்துயிரூட்ட வழங்க வேண்டும்  என எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்தார். ஆனால் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியும், பாஜக  ஆட்சியும் இப்போது வரை கிடப்பில் போட்டு விட்டன என்பது கசப்பான உண்மை! ஆக வழக்கறிஞர் ஈசன்,  விவசாயி, வியாபாரி, மக்கள் என்ற முக்கோண உறவைத் தாண்டி இந்த மூன்று பிரிவினரையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை வாய்ந்த “ஆளும் அரசாங்கம்” உலகமயக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளைக் காப்பதைக் கைவிட்டுவிட்டது என்ற உண்மைக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்,  விவசாயிகளை கைவிட்டது மட்டுமல்ல, இந்திய மக்களையும் கண்டுகொள்ளவில்லை! கார்ப்பரேட் பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதியாகவே இந்தியாவின் தேசிய அரசும், ஆளும் வர்க்கங்களும் செயல்படுகின்றன என்ற உண்மையைச் சொல்ல வேண்டும். வஞ்சிக்கப்படும் விவசாயிகளும், வாங்கும் சக்தி இழந்த மக்களும் கரம் கோர்த்தால்தான் இந்த களவாணிகளை வீழ்த்த முடியும். புத்துயிர் ஊட்டி விவசாயத்தை, விவசாயிகளைக் காப்பாற்ற முடியும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, அவர்களையும் காப்பாற்ற முடியும். அதுவே இந்தியாவுக்கு விடிவு ஏற்படுத்தும்! வேதனைக் குரலில் வெம்பி அழும் அப்பாவி விவசாயிகளை, இந்த அரசியல் சூட்சுமம் தெரிந்தவர்களாக மாற்றி, இதர உழைக்கும் மக்களோடு கை கோர்க்கச் செய்தால்தான் கண்ணீர் வாழ்க்கை முற்றுப்பெறும்! வெங்காய அரசியலை உரித்தால் இந்த உண்மைதான் வெளிப்படுகிறது.