நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் நாளையுடன் முடிவடைவதால், நாளை அனைத்து வங்கிகளும் செயல்படும். அரசு துறைகளின் கருவூலங்கள் சார்பில் பணம் செலுத்துதல், எடுத்தல், கருவூல கணக்குகளை சரிபார்த்தல், காசோலை, வரைவு காசோலை மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டும் நடைபெறும். பொது மக்கள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மட்டும் செலுத்தலாம்.
இது தவிர வழக்கமான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற பணிகள் நடைபெறாது. மேலும் ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி அன்று வங்கிகள் திறந்து இருந்தாலும் சேவை நடைபெறாது.
அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகமும் நாளை இயங்குகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான தாமதிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வருமானவரி படிவங்களை நாளைக்குள் தாக்கல் செய்யலாம். மேலும் அரசு இ-சேவை மையங்களும் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம்.