tamilnadu

img

சீமான் மீது புகார்; நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சமூக வலைதளங்களில் மிகக்  கீழ்த்தரமாகவும், அச்சுறுத்தும் தொனியிலும் பெண்கள் மீது தொடுக்கப்படும்  தாக்குதல் சமீப காலங்களில் மிக மோசமாக அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது. பெண் சமூக செயற்பாட்டாளர்கள், பெண் ஊடகவியலாளர்கள், பெண் கலைஞர்கள், இளம் பெண்கள், மாணவிகள், சிறுமிகள் என பல்வேறு  தரப்பிலான பெண்களும் இத்தகைய வலைத்தள வன்முறையை  சந்தித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது தற்கொலைக்கு முயற்சி செய்த திரைப்பட கலைஞர் விஜயலட்சுமியும் இடம்பெறுகிறார்.  கடந்த 2009ஆம் ஆண்டு முதல், நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடன் இணைந்து வாழ்ந்து விட்டு, ஏமாற்றி விட்டதாக தமிழக காவல்துறையில் புகார்  அளித்தும், இணைய தளங்களில் வெளிப்படையான குற்றச்சாட்டினை முன்வைத்தும் வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியினர் தனது நடத்தையை கீழ்த்தரமாக விமர்சிப்பதாகவும், தனது  உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்வதாகவும்,   இத்தகைய அவமானகர மான முன்னெடுப்புகளால் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகி, அவதியுறுவதாகவும் யு டியூப் காணொளி மூலம் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் சீமானுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமியை மிரட்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் விரக்தியுற்ற நடிகை விஜயலட்சுமி, தனது தற்கொலைக்கு சீமானும், ஹரிநாடாரும் தான் காரணம் என பகிரங்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அடுத்தடுத்து இரண்டு மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டு, உயிர் பிழைத்து மீண்டு வந்துள்ளார்.  ஊடக சந்திப்பிலும் இதே குற்றச்சாட்டுகளை வலியுறுத்தியிருக்கிறார். மேலும், மருத்துவ மனையில் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார்.  இப்பிரச்சனையில் நேர்மையான முறையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக் குழு கோருகிறது. பெண்கள் மீதான இத்தகைய இணையதள தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் தீவிரமாகக் கண்காணித்து, சைபர் குற்றங்களாக பதிவு செய்து உடனடி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.