tamilnadu

img

பட்டாசு வெடிக்க தடையை நீக்கிட தமிழக அரசு தலையிடுமா?

தீபாவளிக்கு  இன்னும் சில நாட்கள்தான் உள்ளது. ஆனால் அடுத்தடுத்து ஒடிசா,ராஜஸ்தான், தில்லி, தற்போது கர்நாடகா என சில மாநிலங்கள் பட்டாசு வெடிக்கதடை விதித்துள்ளன. பட்டாசு வெடிப்பதனால் மட்டுமே காற்று மாசு ஏற்படவில்லை என்று அரசுத் துறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பும் ஏன் இந்த தடை?  

கொரோனா நோய் தொற்று காலத்தில் நுரையீரல் சுவாச பிரச்சனை உள்ளது, எனவே பட்டாசு வெடிப்பதனால் சுவாசப் பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாக, தடை செய்யப்பட்ட மாநில அரசுகளால் கூறப்பட்டுள்ளது. இது சொத்தையான வாதம் என்றே சொல்லலாம். ஏனெனில், அதற்கான எவ்வித ஆதாரங்களையோ அல்லது பாதிப்பின் அம்சங்கள் குறித்து மத்திய அரசோ அல்லது பட்டாசு தயாரிக்க அனுமதி அளிக்கும் பெசோ(faso) போன்ற மத்திய அரசின் அமைப்புகளோ எதுவும் தெரிவிக்காத போது மாநில அரசுகள் தடைவிதிப்பது ஆச்சரியமளிக்கிறது. 

8 லட்சம் தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனை நம்பி உள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்குத் தான் நாடு முழுவதும் அதிகமாக பட்டாசு வெடிப்பது வழக்கம்.இதர நாட்களில் அங்கொன்றும் இங்கொன்று மாக ஏதேனும் நிகழ்ச்சிக்காக மட்டுமே வெடிக்கப்படுகிறது.பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் பல கோடிரூபாய் முதலீடுகள் செய்து இத்தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரசும் கோடிக்கணக்கான ரூபாய் வரி வருவாய் ஈட்டிவருகிறது. இந்நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் பட்டாசு உற்பத்திக்கு தடைவிதிக்காத போதும் சில மாநில அரசுகள் தடைவிதித்துள்ளன. இத்தடையை நீக்கிட மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் மாநில அரசும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

புதிய புதிய பிரச்சனைகள்  
சில ஆண்டுகளாகவே மத்திய அரசு பட்டாசுதொழிலில் பாராமுகம் காட்டி வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு தான் பட்டாசுத்தொழில் கடும் சோதனையையும் வேதனையை யும் சந்தித்து வருகிறது. சீனப் பட்டாசு வருகை, நீதிமன்றத்தால் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்று ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய பிரச்சனைகளை சந்தித்தது.இதற்கு முன்பு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே பட்டாசுக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்து வந்தன. தற்போது பல்வேறு மாநில அரசுகளே பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிக்கும் நிலையை எட்டியுள்ளது கவலைக்குரியது.

கொரோனா ஊரடங்கால் பாதிப்பு
நடப்பு ஆண்டு மார்ச் இறுதி முதல் ஜுலை வரை  கொரோனாவின் தாக்கத்தால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பட்டாசு தொழிலை நம்பி வாழ்ந்து வரும் ஏழை, எளியமக்களுக்கு வேலை இல்லை; வேறு வருமானமும் இல்லை. வெறும் ரூ.2000 மட்டுமே கொடுத்துவிட்டு டாஸ்மாக் மதுபானக் கடையை திறந்ததுஅரசு. அதை திறந்தே ஆகவேண்டும் என உச்சநீதிமன்றம் வரை சென்றது. ஆனால் பட்டாசுதொழிலாளர்கள் வயிற்றுப் பசியாற, பிள்ளைகளுக்கு பால் வாங்கிக் கொடுக்க, ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுக்க கூட வழியில்லாத நிலை உருவானது. இதனால் அரசை எதிர்பார்த்துஎதிர்பார்த்து கண்பூத்து போனது, வயிறோ காய்ந்தது. சிறுகச் சிறுக சேமித்து வைத்ததொகையை கொரோனா சூறையாடியது.
ஊரடங்கு தளர்விற்கு பின்பு பட்டாசு உற்பத்தியாளர்கள் சிறிய நம்பிக்கையோடு வாரத்திற்கு3 நாட்கள் மட்டுமே வேலை என்று சுழற்சி முறையில் தொழிலாளர்களை வரவழைத்து உற்பத்தியை துவங்கி முதலீடும் செய்தனர். தொழிலாளர் களும் மகிழ்ச்சியோடு வேலைக்கும் சென்றனர். ஆனால் வட இந்திய பகுதிகளில் இருந்து எதிர்பார்த்தளவில் ஆர்டர்கள் பெரிதாக வரவில்லை. சிறிது சிறிதாக நம்பிக்கையும் தளர்ந்தது. போட்ட முதல் கிடைத்தாலே போதும் என்ற நிலையிலேயே பட்டாசு உற்பத்தியை செய்து வந்தனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை. அதுமட்டுமின்றி ஒரு உற்பத்தியாளர் சொன்ன தகவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி யது. இரண்டு வங்கிகளில் பட்டாசு தொழில் அபிவிருத்திக்காக வங்கியில் கடன் கேட்டால் கொடுக்க வேண்டாம் என நிர்வாகங்கள் கூறியுள்ளனவாம். பட்டாசுத் தொழிலுக்கு இனி எதிர்காலம் இல்லை என்ற நிலையில் உள்ளதால் கொடுத்த கடன் திரும்ப வருமா என உறுதிசொல்ல முடியாது என்று வங்கி நிர்வாகத்தினர் கூறுவதாக தெரியவந்துள்ளது. 
இப்படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பட்டாசுத் தொழில் வாழ்வா சாவா என்ற மரணத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது; அதே போல்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் நிலையும்!  எனவே தற்போது உள்ள நிலையில் பட்டாசு தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திட மத்திய - மாநில அரசுகள் பெரும் முயற்சி எடுத்திட  வேண்டும். இல்லையெனில் தீபாவளி முடிந்ததும் நிச்சயம் அடுத்த ஆண்டிற்கு தேவையான பட்டாசு உற்பத்தியை துவக்கிட முடியாது.

இந்த நிலை நீடித்தால் எத்தனை எத்தனை ஏழை, எளிய பட்டாசுத் தொழிலாளர் களும், குழந்தைகளும், பசித்த வயிறோடும்,பட்டினியோடும், காய்ந்து வயிறு ஒட்டிக் கிடக்கப் போகிறார்கள் என்பதை நினைத்தால் நமக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பட்டாசுத் தொழில் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த நேரமே தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூட வக்கற்ற நிலையில்தான் பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்கள் இருந்தனர். உற்பத்தியாளர்களும் வஞ்சனைகளோடுதான் கூலியும் கொடுத்தனர் என்ற வரலாற்றை யாரும் மறக்க முடியாது. எனினும் தற்போது எல்லோருடைய கோரிக்கையும் பட்டாசுத் தொழிலை பாதுகாப்பதுதான்.ஏற்கனவே கொரோனாவினால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பட்டாசுத் தொழிலாளர்கள் கடந்த ஆண்டுகளைப் போலவே அரசுஅலுவலகங்களை நோக்கியும் தெருக்களிலும் செங்கொடிகளோடும் பதாகைகளோடும் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.

===பி.பாலசுப்பிரமணியன்=== 
சிபிஐ(எம்)  சிவகாசி ஒன்றியச் செயலாளர்